புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், ஆதலால் பெண்கள் வன்முறைச் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் எனவும் ஊர்காவற்றுறை பொலிஸார், ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியாலிடம் கேட்டுக்கொண்டனர்.
புங்குடுதீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பயணித்த பெண்ணின், கழுத்தை நெரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை (25) நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிணை வழங்குமாறு சட்டத்தரணியூடாக சந்தேகநபர் விண்ணப்பத்திருந்தார்.
எனினும், பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொலிஸார், பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றனர்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.