வித்தியாவின் வழக்கை திசை திருப்புவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் பெய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்எம்.ரியால் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு பெய்யான பரப்புரைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கடுமையான சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் நீதவான் எச்சரிக்கை செய்துள்ளார்.
புங்குடுதீவில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த வித்தியா கடந்த வருடம் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பான வழங்கு விசாரணைகள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்று காலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது B/ 1162015 என்னும் இலக்கமுடைய வித்தியாவின் கொலை வழக்கு விசாரணைக்கான அழைப்பு மன்றில் முதலியாரினால் விடுக்கப்பட்டிருந்தது.
இருந்த போதும் வழக்கு பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று நீதவான் அறிவுறுத்தியதை அடுத்து வழக்கு நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி சுமார் 12 மணிக்கு பின்னர் குறித்த வழக்கு நீதவானால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது மன்றில் தோன்றிய குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி வழமை போன்று விசாரணைகள் நடைபெற்று வருகின்றது என்றும், விசாரணைகள் முடியாத காரணத்தினால் சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கான அனுமதியினை மன்று வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நீதவானால் குறிப்பிட்ட ஒரு நபர் ஒருவரை (தமிழ்மாறன்) கைது செய்வதற்கான அனுமதி மன்றில் தரப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இவ்வனுமதி எந்த நீதிமன்றத்தினால் எந்த நீதவானினால் தரப்பட்டது என்று குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி சட்டமா அதிபர் திணைக்களத்தில் அவ்வாறான ஒரு பிரஸ்தாபங்களை நாங்கள் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் பெய்யான கருத்துக்களை வெளியிடக் கூடாது என்று குற்றப் புலனாய்வு பிரிவினரை எச்சரித்த நீதவான் மீண்டும் யாரால் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இந்த பிரஸ்தாபங்கள் செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி தான் அந்த பிரஸ்தாபத்தினை செய்யவில்லை என்றும், தனக்கு மேல் உள்ள அதிகாரி அவ்வாறான பிரஸ்தாபத்தினை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இப் பதிலினால் ஆத்திரமடைந்த நீதவான் இந்த வழக்க நடவடிக்கைகளை கொண்டு நடாத்தும் அதிகாரி நீர் இவ்வாறு பொறுப்பற்ற பதிலை வழங்கக் கூடாது.
நீதிமன்ற வழக்க நடவடிக்கைகள் தொடர்பான இரகசியத்தினை நீர் பேணவேண்டும். வழக்கு நடவடிக்கைகள் தொடர்பான ஏதாவது சந்தேகங்கள், தேவைகள் ஏற்படின் அது தொடர்பாக மன்றுக்கு தெரியப்படுத்தி உரிய முறையில் அதனை அனுகிக் கொள்ள வேண்டும்.
இதைவிடுத்து வழக்கு நடவடிக்கைகள் தொடர்பான வெளியில் உள்ளவர்களுக்கோ அல்லது வெளி நிறுவனங்களுக்கோ தெரியப்படுத்தக் கூடாது.
அவ்வாறு தெரியப்படுத்துவது வழக்கு நடவடிக்கைகளை திசை திருப்பம் முயட்சியாக மாறிவடும். இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.
அதனையும் மீறி இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டடால் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்தார்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் மன்று விளக்கம் கோரும் என்றும் நீதவான் மன்றில் தெரியப்படுத்தியிருந்;தார்.