யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காது அசமந்தமாக செயற்படுவதாக மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். மாவட்டத்தின் சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறித்த விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பொலிஸ் பிரிவுகளிலுள்ள அதிகாரிகள் திறமையாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்ற போதும் சில அதிகாரிகள் அசமந்தமாகவும் செயற்படுகின்றனர் என மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறிப்பாக களவு, கொள்ளை,வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றமை தொடர்பாக தாம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருவதில்லையெனவும் நீண்ட நேரம் கழித்தே வருகின்றனர் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள் வெட்டு, கொள்ளை சம்பவங்களால் மாலை 6 மணிக்கு பின்னர் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இரவை கழிப்பதைவிட நாட்டை விட்டு வெளியேறுவது நல்லமுடிவு என்றும் எம்மிடம் ஒருவர் முறையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மனநிலைக்கு ஒருவர் உள்ளாகும் அளவுக்கு தற்போது வன்முறை சம்பவங்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ளன. எனவே இவற்றை கட்டுப்படுத்த பொலிஸார் விரைந்து செயற்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்போது வடமாகாணத்துக்கு விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,
குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பிரதேசங்களில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் மக்கள் கடிதம் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ தெரியப்படுத்துங்கள். அவ்வாறு தெரியப்படுத்தினால் விரைந்து நடவடிக்கையை நாம் எடுக்கமுடியும்.
மேலும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் உடந்தையாக செயற்படுகின்றமை தொடர்பாக தெரியவந்தால் அது தொடர்பாக எனது தொலைபேசி இலக்கமான 077 7306976 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறைப்பாட்டை தெரிவிக்கலாம். அவ்வாறு பெற்றுக்கொள் ளப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் இரகசியம் பேணப்படும். எனவே பொது மக்கள் துணிச்சலுடன் முறைப்பாடுகளை தெரிவித்து எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.