கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அத்துமீறி நுழையவில்லை எனவும் அது தொடர்பில் இராணுவத்தினர் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் எதனை யும் அளிக்காத நிலையில் அந்த விடயம் குறித்த
விசரணைகளும் அதன் கீழான கைதுகளும் அவசியமற்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அத்து மீறியதாகவும் அதற்காக வேண்டி அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு சவால் விடுத்து வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவை கேசரி வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது இந்த விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 16 ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் காணி விவகாரம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கவும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலும் எமது பொலிஸ் அதிகாரிகளும் அவ்விடத்துக்கு சென்றிருந்தனர்.
இந்த கலந்துரையாடலின் இடையிலேயே பொது மக்களின் காணிகளைப் பார்வையிட என சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் பகுதிக்கு சென்றுள்ளனர். இதன் போது பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸாரும் கூடவே சென்றுள்ளனர்.
பொலிஸ் வாகனங்கள் முன்னே செல்ல பின் தொடர்ந்த சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் அந்த இராணுவ முகாம் வாயிலை அடைந்த போது அங்கிருந்த இராணுவத்தினர் எவ்வித எதிர்ப்பும் வெளியிடாது உடனடியாகவே வாயிலை திறந்துள்ளனர். அதன் பின்னரேயே முகாமுக்குள் அவர்கள் சென்றுள்ளனர்.
அவ்வாறு சென்ற அவரும் அவர் குழுவினரும் இராணுவ முகாம் வாயிலுக்கும் அதனை அண்மித்த பகுதிக்கும் இடையில் தங்கிருந்தவாறே காணிகளை அவதானித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
இதனை நாம் அத்துமீறியதாக கொள்ள முடியாது. ஏனெனில் இராணுவம் இது குறித்து இது வரை எமக்கு எவ்வித முறைப்பாடுகளையும் வாய்மொழி மூலமாகவோ எழுத்து மூலமாகவோ வழங்கவில்லை.
இது குறித்து தகவல் அறிய அந்த இராணுவ முகாமுக்கு எமது அதிகாரிகள் சென்ற போதும் கூட அவர்கள் சம்பந்தன் அத்துமீறியதாகவோ அல்லது அவருக்கு எதிரான வாக்கு மூலங்களையோ வழங்கவில்லை. அவர்கள் இது குறித்து எதனையுமே கூறவில்லை.
அப்படி இருக்கையில் இந்த விடயம் குறித்து பொலிஸார் விசரணைகளை மேற்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது. அத்துடன் இதற்காக சம்பந்தனை கைது செய்யவும் முடியாது. ஒவ்வொருவரும் சொல்வதைப் போல் பொலிஸாரால் செயற்பட முடியாது. சட்டத்துக்கு உட்பட்டே பொலிஸார் செயற்படுவர் என்றார்.