தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் தலைவர்களில் ஒருவரான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் நேற்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் நீர்வேலி தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து சிவில் உடையில் வந்த நான்கு பேரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு நீர்வேலியில் உள்ள நகுலனின் இல்லத்துக்கு சென்ற நான்குபேர் அவர் தொடர்பாக வீட்டிலிருந்தவர்களிடம் விசாரணை செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் மீண்டும் அவரது வீட்டிற்கு சென்ற குறித்த நால்வர், மீண்டும் நகுலன் தொடர்பாக விசாரித்ததுடன் அவர் தற்போது எங்குள்ளார் என வீட்டிலிருந்தவர்களிடம் கேட்டுள்ளனர்.
இதன்போது நகுலன் நீர்வேலி கரந்தனில் உள்ள தோட்டத்துப் பயிர்களுக்கு நீர்பாய்ச்சுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சிவில் உடையில் நின்ற நால்வரும் குறித்த தோட்டத்துக்குச் சென்று நகுலனுடன் உரையாடியதுடன் அவரை விசாரணைக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் செல்வதாக உறவினர்களிடம் தெரிவித்து கைது செய்துள்ளனர்.
இதன்போது நகுலனின் தந்தையும் அவருடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நகுலனை கொழும்பு தலைமையக விசாரணைக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக அவரது தந்தையிடம் கைது செய்த சிவில் உடை தரித்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனிபடைப் பிரிவின் தளபதிகளில் ஒருவரான கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி (நகுலன்) என்பவர் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னர் அவர் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்து முழுநேர விவசாயியாக வாழ்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.