ஜார்கண்ட் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவரின் மகன் 11 வயது சிறுமியை திருமணம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருக்கு எதிராக பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்து உள்ளார்.
பா.ஜ.க. தலைவர்
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் தலா மராண்டி. பழங்குடியின தலைவரான இவர் மாநில பா.ஜ.க. தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இவரது மகன் முன்னா மராண்டிக்கு கடந்த செவ்வாய்கிழமை திருமணம் நடந்தது.
அவர் 11 வயது சிறுமியை திருமணம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மேலும் அந்த சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக இந்த திருமணம் நடந்தாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு மையத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் முன்னா மராண்டியின் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளார். கோடா மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் முன்னா மராண்டி தன்னுடன் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாகவும் கூறி உள்ளார்.
முன்னா மராண்டி தனக்கு செல்போன் பரிசளித்தாவும், தன்னை பாலியல் தேவைக்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக முன்னா மராண்டி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பெண் மாவட்ட கோர்ட்டில் புகார் அளித்து உள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் செய்து உள்ளார். அவரது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் ஆணையத்தின் தலைவர் மகுவா மஞ்சி உறுதி அளித்து உள்ளார். 2 புகார்களின் பேரிலும் மகளிர் ஆணையம் முன்னா மராண்டிக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் போர்க்கொடி
பா.ஜ.க. மாநில தலைவரின் மகன் அடுத்தடுத்து 2 குற்றசாட்டுகளில் சிக்கியிருப்பது மாநில அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடிகளை உயர்த்தி உள்ளன.
இது விவகாரங்கள் தொடர்பாக உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.