நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக அவர்களை குஷிப்படுத்துவதற்காக கங்கை நதியில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் கடந்த செவ்வாய்க்கிழமை சில வாலிபர்கள் குளிக்க வந்தனர்.
அவர்களில் ஒருவர் நண்பர்களுடன் பேசியபடியே ஆற்றில் குதிக்கிறார். அவர் ஸ்டைலாக டைவ் அடிப்பதை உடன் இருந்தவர்கள் வீடியோ எடுக்கின்றனர். ஆனால், தலைகுப்புற விழுந்த அந்த வாலிபர், வெகுநேரமாகியும் கரையேறவில்லை.
இதனால், பயந்துபோன சக நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் வந்து தேடினர். ஆனால், ஆற்றில் குதித்த வாலிபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வியாழக்கிழமை வரையில் அவரது உடல் எங்கு கரை ஒதுங்கியது என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.
போலீசார் நடத்திய விசாரணையில் ஆற்றில் குதித்த நபர் ஹரித்வாரின் காந்த்மிர்பூர் பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் சவுகான் (வயது 27) என்பது தெரியவந்தது.
நண்பர்கள் அனைவரும் ஆற்றங்கரையில் அமர்ந்து மது அருந்தியதாகவும், போதையில் இருந்த ஆஷிஷ், நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக ஆற்றில் குதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.