எனது கடைக்குள் 20க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ நேரம் காணப்பட்டனர். .அப்போது கபில என்பவர் மூன்று மூறை சுட்டார்.
அவர் இந்த மன்றில் உள்ளார் என குமாரபுரம் கொலை தொடர்பாக சாட்சியமளித்த வீரசாமி காளிமுத்து (60) என்பவர் தெரிவித்தார்.
நேற்று 10 ஆவது நாளாக அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளில் சாட்சிய மளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியளிக்கையில், நான் எமது கிராமத்தில் கிளிவெட்டி – மூதூர் பிரதான வீதியில் கடையொன்றை நடத்தி வந்தேன். சம்பவதினம் வீதியில் படையினர் சுட்டுக் கொண்டு வந்தனர். அப்போது சுமார் 20 பேருக்கு மேல் பயத்தின் காரணமாக கடைக்குள் புகுந்தனர்.
அதனால் நாம் அச்சம் காரணமாக கடை கதவை சாத்தினோம். இதன்போது கபில என்ற இராணுவ வீரர் முதலில் கதவு ஓட்டைகளின் ஊடாகச் சுட்டார். பின்னர் கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்து சுட்டார். அதன்போது பலரும் இறந்தனர். கடைக்குள் ஐந்துபேர் வரை இறந்தனர்.
அதேவேளை இந்தச் சம்பவத்தில் சீரழிக்கப்பட்ட 16 வயது பெண் பிள்ளையும் எனது கடைக்குள் மறைந்திருந்துள்ளார். அப்போது நாங்கள் பலர் காயப்பட்ட நிலையில் வெளியேறிவிட்டோம்.
ஆனால், அந்த 16 வயதான பிள்ளை கடைக்குள் தான் இருந்துள்ளார். அவரைக் கண்ட இராணுவத்தினர் அருகிலிருந்த பாழடைந்த பால் சேகரிப்பு நிலைய கட்டடத்திற்குள் வைத்து கூட்டு துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
அது எமக்கு உடன் தெரியவரவே வந்து பார்த்தபோது குறித்த இளம் பிள்ளையின் உடல் பனை ஓலையால் மூடப்பட்டிருந்தது. இறந்தவர்களின் உடல்கள் பல பலரால் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார்.
கிராம சேவகர் சுப்பிரமணியம் இராசலிங்கம் என்பவர் சாட்சியமளிக்கையில், குறித்த கிராமத்தில் 74 குடும்பங்கள் இருந்ததாகவும். அவர்கள் பெரும்பாலும் தற்காலிக கொட்டில்களிலேயே வசித்து வந்தனர் என்றும் கிராமம் முகாமிலிருந்து 600 மீற்றர் இடை வெளியில் அமைந்துள்ளது எனவும் விபரித்தார்.