சுவாதி படுகொலையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அவளோடு பழகிய நாட்கள் இனி வருமா என்ற ஏக்கம் மட்டும் எனக்குள் இருக்கிறது என்கிறார் சுவாதியின் நெருங்கிய தோழி ஒருவர்.
பெயரை குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார் சுவாதியின் தோழி.
“சுவாதிக்கு ஜெனரல் ஷிப்ட் என்றால் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் காலை 6.15 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் ஏறுவார்.
இடையில் நான் ஏறுவேன். எனக்காக அவர் ஹேண்ட் பேக்கை வைத்து இடம் பிடித்து வைத்திருப்பார்.
ரயிலில் தான் இருவரும் டிபன் சாப்பிடுவோம். எப்போதும் ஜாலியாக பேசுவோம். இதனால் செங்கல்பட்டு வருவது கூட எங்களுக்குத் தெரியாது. அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை என்று சொல்லும் போதே அவரது கண்கள் நீரால் நிறைந்தன.
சில நிமிடத்துக்குப் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச தொடங்கிய அவர், சுவாதி படுகொலை நடந்த வாரம் எனக்கு நைட் ஷிப்ட். இதனால் அவளுடன் நான் செல்லவில்லை. இதனால் தனியாக ரயிலில் சென்றுள்ளார் சுவாதி. எங்கள் நட்பு வட்டாரம் பெரியது.
அனைவரும் சகஜமாக பேசுவோம். சிலரை உறவு முறை சொல்லி அழைப்போம். எங்கள் குரூப்பில் எல்லோருக்கும் ஒரு செல்ல பெயர் இருக்கிறது. சுவாதிக்கு கூட செல்லப் பெயர் வைத்திருந்தோம். அது என்னவென்றால் ‘நான் ஸ்டாப்’ என்பதே அந்தப் பெயர்.
அதற்கு காரணமே அவள் பேச தொடங்கினால் யாரையும் குறுக்கே பேச விடமாட்டார். ஆபிஸிலும் அவள் அப்படித் தான். கொடுக்கிற ப்ராஜெட்டை கூட கேஷிவலாக டீல் பண்ணுவார். இதனால் எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்.
அவளை யாராலும் மறக்க முடியாது. நானும், அவளும் கூட சில நேரங்களில் சண்டை போட்டுள்ளோம். அதையெல்லாம் மறந்துவிட்டு அடுத்த நிமிடமே பேசிவிடுவார். அனைவர் மீதும் இரக்கப்படுவாள். அவளுக்கு இந்த நிலைமை என்று நினைக்கும் போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.
சுவாதி, தன்னை கட்டடத் தொழிலாளி ஒருவன் பின்தொடர்ந்து வருவதாக ஒரு முறை சொல்லி இருக்கிறாள்.
ஆனால் அவர் யார் என்று தெரியாது. சுவாதியைக் கொலை செய்யும் அளவுக்கு அவர் செல்வார் என்று யாருமே நினைக்கவில்லை. சுவாதியைப் போல ஒரு தோழியை வாழ்க்கையில் இழந்ததை எது கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது.
நினைவுகள் மூலம் அவள் இன்னும் நண்பர்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.
சுவாதியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால்,சர்ப்பரைஸாக பரிசு கொடுப்பாள். அவள் கொடுத்த கீ செயின் இன்னும் என்னிடம் உள்ளது.
அதைப் பார்க்கும் போதெல்லாம் அவளுடைய நினைவு வருகிறது. அடுத்து எங்கள் நட்பு வட்டாரத்தில் பார்ட்டி கொடுத்து அசத்துவோம். இப்போது அந்த பார்ட்டி நடப்பதில்லை.
சுவாதி கொலை செய்யப்பட்ட தகவலைக் கேட்டதும் அலுவலகத்தில் எல்லோருக்கும் ஒரே ஷாக். அடுத்து சுவாதியின் கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுப்பிடிக்க காலதாமதமானதும், போலீஸார் எங்களிடம் (நண்பர்களிடம்) எல்லாம் விசாரித்தார்கள்.
எல்லோரும் தங்களுக்குத் தெரிந்ததை சொன்னோம். சில தகவல்கள் போலீசுக்கு உறுதுணையாக இருந்தன.
ஆனால் சுவாதி குறித்த தவறான தகவல்களையும், வதந்திகளையும் சிலர் பரப்பி விட்டனர். அது எங்களுக்கு வருத்தமாக இருந்தது. இப்போது என் அருகில் அமர்ந்த சுவாதி இல்லாமல், செங்கல்பட்டு மின்சார ரயிலில் அலுவலகத்துக்குச் செல்கிறேன்.
அவள் இல்லாத பயணத்தைத் தவிர்க்க, இருப்பிடத்தை செங்கல்பட்டுக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன்” என்றார் சோகம் வழிய.