திருவண்ணாமலை: செங்கத்தில் தாய், தந்தை மற்றும் மகனை 3 போலீசார் நடுரோட்டில் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மூன்று காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தோக்கவாடியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா (38). இவரது மனைவி உஷா (35), மகன் சூரியா (18). இவர்கள் மூன்று பேரும் உறவினர் திருமணத்துக்காக நகை வாங்க நேற்று மதியம் செங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நகை கடைக்கு வந்துள்ளனர்.
அப்போது நகையைத் தேர்வு செய்வதில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.
உடனே இருவரும் நகைக்கடையை விட்டு வெளியே வந்து நின்றபடி நடுரோட்டில் வாய்த்தகராறில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது, அந்த வழியாக வந்த செங்கம் போலீஸ்காரர்கள் முருகன், விஜயகுமார் மற்றும் நம்வாழ்வார் ஆகியோர், ராஜா மற்றும் அவரது மனைவியிடம், ‘ஏன் நடுரோட்டில் நின்று சண்டை போட்டு கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளனர்.
அதற்கு இருவரும், ‘இது எங்கள் வீட்டுப்பிரச்னை. நாங்கள் சண்டை போட்டுக் கொள்வோம். சேர்ந்துகொள்வோம். நீங்கள் ஏன் இதைக் கேட்கிறீர்கள்?’ என்று கூறியதாகத் தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த போலீசார், ‘எங்களிடமே திமிராக பேசுகிறாயா?’ என்று கேட்டபடி கணவன், மனைவி, மகன் என மூவரையும் லத்தியால் சரமாரியாக கண்மூடித்தனமாகத் தாக்கி இருக்கின்றனர்.
இதன் உச்சமாக ஒரு போலீஸ்காரர் தனது பூட்ஸ் காலால் எட்டி எட்டி உதைத்து இருக்கிறார். போலீசாரின் அடி உதையை தாங்க முடியாமல் மூவரும் நடுரோட்டில் தலைதெறிக்க அங்கும் இங்குமாக ஓடி இருக்கின்றனர்.
அப்போதும் ஆத்திரம் அடங்காத 3 போலீசாரும், விடாமல் தொடர்ந்து விரட்டி விரட்டி ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூரியாவை சரமாரியாக அடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் பெருமளவில் கூடியதுடன், ‘ஏன் அவர்களை நடுரோட்டில் இப்படி தாக்குகிறீர்கள்? தப்பு செய்திருந்தால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்’ என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.
உடனே மூன்று போலீசாரும் அங்கு கூடி இருந்த பொதுமக்களையும் மிரட்டி அங்கிருந்து விரட்டி அடித்ததுடன் சுமார் 15 நிமிடத்துக்கும் மேல் மீண்டும் மீண்டும் கணவன், மனைவி, மகனை 3 போலீசாரும் கண்மூடித்தனமாகத் தாக்கி இருக்கின்றனர்.
இதனால் ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூரியா அதே இடத்தில் படுகாயத்துடன் மயங்கி விழுந்துள்ளனர். உடனே, காயங்களுடன் கிடந்த 3 பேரையும் மீட்ட பொதுமக்கள், அவர்களை சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து செங்கம் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தும் இருக்கின்றனர். இதை தொடர்ந்து செங்கம் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் நலம் விசாரித்து அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்த கொடூர தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்த தோக்கவாடி பகுதி மக்கள், செங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ ஊடகங்களில் வெளியான நிலையில், திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி பரிந்துரையின் பேரில் போலீஸ்காரர்கள் முருகன், விஜயகுமார் மற்றும் நம்மாழ்வார் ஆகிய மூன்று பேரையும் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ஆனாலும், தம்பதியை தாக்கிய 3 போலீசாரையும் கைது செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை-பெங்களூர் நெடுஞ்சாலையில் நேற்று(திங்கள்0 இரவு அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. கணேசன், டி.எஸ்.பி. சாஜிதா ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போலீசாரின் சமாதானத்தை பொதுமக்கள் ஏற்காததால் செங்கம் பகுதியில் நேற்று இரவு பதற்றம் நிலவியது..