எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனுக்கு லிபரல் கட்சியின் கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்த சங்கரிக்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இச் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இச்சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன்,
லிபரல் கட்சியின் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரியுடனான சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றது. பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம்.
விசேடமாக பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கவேண்டியதன் அவசியம் தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.
அதேநேரம் தற்போது பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கனடாவில் சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பில் காணப்படும் சட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.
கட்டாயமாக சிறுபான்மை சமூகங்களை பாதுகாக்கும் வகையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களையும் அவர் என்னிடத்தில் முன்வைத்திருந்தார் என்றார்.