ஐரோப்­பிய ஒன்­றி­யத்­து­ட­னான பல தசாப்த கால பிணைப்பை துண்­டித்து தனக்­கென புதிய பாதையில் சுதந்­தி­ர­மாக பய­ணத்தைத் தொடர காத்­தி­ருக்கும் பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­த­ம­ராக தெரேஸா மே பத­வி­யேற்­றுள்ளார்.

அந்­நாடு சவால்கள் பல­வற்றை எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டி­யான தரு­ணத்தில் நாட்டை வழி நடத்தும் பொறுப்பை ஏற்­றுள்ள அவ­ரது அடுத்த கட்ட அர­சியல் நகர்வு எவ்­வாறு இருக்கும் என்­பதை பிரித்­தா­னிய மக்கள் மட்­டு­மல்­லாது முழு உல­க­முமே அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

showImageInStoryபிரித்­தா­னி­யாவின் இரண்­டா­வது பெண் பிர­த­ம­ராக பத­வி­யேற்­றுள்ள அவர், அந்­நாட்டின் முதல் பெண் பிர­த­ம­ரான இரும்புப் பெண்­மணி என வர்­ணிக்­கப்­படும் மார்க்ரெட் தட்சர் போன்று தனது கட்­சி­யையும் நாட்­டையும் வெற்­றி­க­ர­மாக வழி­ந­டத்திச் செல்­வாரா என்ற யதார்த்த­மான கேள்­விக்கு விடை காண அனை­வரும் காத்­தி­ருக்­கின்­றனர்.

சர்­வ­தேச ரீதியில் அதிக பிர­ப­லத்தை பெற்­றுத்­த­ராத உள்­துறை செய­லாளர் பத­வியை வகித்த போதும், குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்­பான தனது சர்ச்­சைக்­கு­ரிய கடும்­போக்குக் கொள்­கை­களால் உல­க­ளா­விய ரீதியில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி வந்த ஒரு­வ­ராக தெரேஸா மே விளங்­கு­கிறார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வ­தற்கு ஆத­ர­வாக பிரித்­தா­னிய மக்கள் வாக்­க­ளித்­த­தை­ய­டுத்து, அந்­நாட்டில் ஏற்­பட்ட அர­சியல் பூகம்ப நிலையின் தொடர்ச்­சி­யா­கவே தெரேஸா மேயின் பிர­தமர் பதவி நிய­மனம் இடம்­பெற்­றுள்­ளது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் பிரித்­தா­னியா தொடர்ந்து இணைந்­தி­ருப்­ப­தற்கு ஆத­ர­வாக பிர­சாரம் செய்து வந்த பிர­தமர் டேவிட் கமரோன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பி­லான தோல்­வி­யை­ய­டுத்து பதவி வில­கு­வ­தாக அதி­ரடி அறி­விப்பைச் செய்தார்.

இந்­நி­லையில் அவ­ரது பழை­மை­வாத கட்சி உறுப்­பி­னர்கள் தமது கட்­சிக்கும் நாட்­டுக்­கு­மான தலை­வரை தெரிவு செய்ய வேண்­டிய நிர்ப்பந்­தத்­திற்கு உள்­ளா­கினர்.

தொடர்ந்து கடந்த 5 ஆம் திகதி கட்சி உறுப்­பி­ன­ரி­டையே நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்பில் தெரேஸா மே 165 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைப் பெற்று பெரு­ம­ளவு வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் முத­லி­டத்தைப் பெற்றார்.

அந்த வாக்­கெ­டுப்பில் அவ­ரது போட்டி வேட்­பா­ளர்­க­ளான அன்ட்றி லீட்ஸம் 66 வாக்­கு­க­ளையும் மைக்கேல் கோவ் 48 வாக்­கு­க­ளையும் பெற்­றி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து கடந்த 7 ஆம் திகதி நடத்­தப்­பட்ட இரண்டாம் கட்ட வாக்­கெ­டுப்பில் போட்டி வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை இரண்­டாகக் குறைக்­கப்­பட்­டது. அந்த வாக்­கெ­டுப்பில் தெரேஸா மே 199 வாக்­கு­க­ளையும் அன்ட்றி லீட்ஸம் 84 வாக்­கு­க­ளையும் பெற்­றி­ருந்­தனர்.

அதே சமயம் 46 வாக்­கு­களைப் பெற்ற மைக்கேல் கோவ் போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்க நேர்ந்­தது.

இந்­நி­லையில் மேற்­படி போட்­டியில் வெற்றி பெற்று பிர­ம­த­ராக தெரிவு செய்­யப்­ப­டு­பவர் யார் என்­பது எதிர்­வரும் செப்­டெம்பர் 9 ஆம் திகதியே அறி­விக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

தெரேஸா மேயைப் பொறுத்­த­வரை அவர் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் இணைந்­தி­ருப்­ப­தற்கு ஆத­ர­வாக பிர­சாரம் செய்து வந்த ஒரு­வ­ராவார்.

அதே­ச­மயம் அன்ட்­றியா லீட்ஸம் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வ­தற்கு ஆத­ர­வ­ளித்து வந்­தி­ருந்தார்.

இதன் கார­ண­மாக பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரியும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தெரேஸா மே பொருத்தமான ஒரு­வ­ராக அமை­வாரா என்ற கேள்­வியை அவ­ரது எதிர்ப்­பா­ளர்கள் எழுப்­பினர்.

இத்­த­கைய சூழ்­நி­லையில் ஆரம்­பக்­கட்ட வாக்­கெ­டுப்­பு­களில் மாபெரும் வெற்றி பெற்­றுள்ள தெரேஸா மேயின் அர­சியல் எதிர்­காலம் எதிர்­ம­றை­யாக திசை திரும்­பு­வ­தற்கு வாய்ப்­புள்­ள­தாக கரு­தப்­பட்­டது.

ஆனால் அவ­ரது போட்டி வேட்­பா­ள­ரான அன்ட்­றியா லீட்­ஸமின் அர­சியல் வியூ­க­மற்ற கருத்து வெளிப்­பா­டுகள், அவரை போட்டி வேட்பாளர் என்ற நிலை­யி­லி­ருந்து கீழி­றக்­கி­யது என்று கூறலாம்.

அன்ட்­றியா லீட்ஸம் ஊட­க­மொன்­றுக்கு அண்­மையில் அளித்த பேட்­டியில், தெரேஸா மே பிள்­ளைகள் அற்­றவர் என்­பதை காரணம் காட்டி அவர் பிர­தமர் பத­விக்கு பொருத்­த­மற்­றவர் என்­பதை சுட்டிக் காட்டும் வகையில் கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அதன் போது லீட்ஸம், தான் தாயொ­ரு­வ­ராக இருப்­பது உள்­துறை செய­லா­ள­ரான தெரேஸா மேயை விடவும் தன்னை பிர­தமர் பதவிக்கும் பொருத்­த­மான வேட்­பா­ள­ராக்­கி­யுள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

pm-candidates-800Theresa May (left) and Andrea Leadsom

தனது கருத்து வெளிப்­பா­டு­களால் எழுந்த சர்ச்­சை­யை­ய­டுத்து கடந்த 11 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை பிர­தமர் பத­விக்­கான போட்டியிலிருந்து ஒதுங்­கு­வ­தாக அன்ட்­றியா லீட்ஸம் திடீர் அறி­விப்பு செய்தார்.

இதன்­போது அவர், பிரித்­தா­னியா எதிர்­கொண்­டுள்ள மிகவும் நெருக்­க­டி­யான தரு­ணத்தில் நாட்டின் புதிய தலை­வரை தெரிவு செய்வதற்கு சுமார் 9 வார காலம் காத்­தி­ருப்­பது விரும்­பத்­தக்­க­தல்ல என்­பதால் புதிய தலைவர் ஒரு­வரை உட­ன­டி­யாக தெரிவு செய்வதற்கு வழி­யேற்­ப­டுத்தித் தரும் வகையில் தான் பதவி வில­கு­வ­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத்­துடன் தன்­னு­டைய பொறுப்­பற்ற விமர்­ச­னத்­துக்­காக அவர் தெரேஸா மேயிடம் மன்­னிப்புக் கோரி­யி­ருந்தார்.

அன்ட்­றியா லீட்­ஸமின் அறி­விப்­பை­ய­டுத்து டேவிட் கமரோன் உட­ன­டி­யாக பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து விலகி தெரேஸா மேயிடம் அதிகா­ரத்தைக் கைய­ளித்­துள்ளார்.

புதிய பிர­த­ம­ராக பத­வி­யேற்ற தெரேஸா மே, தனது உரையின் போது அனை­வ­ருக்­கு­மான நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப உறு­தி­ய­ளித்­துள்ளார்.

theresa-may.jpg.size.custom.crop.1086x700theresa-may

நீண்ட காலக் கனவு

தெரேஸா மேயை (59 வயது) பொறுத்­த­வரை வல்­ல­ரசு நாடொன்றின் பிர­தமர் என்ற அதி உயர் பதவி அவர் ஒரு இரவில் அதிர்ஷ்டத்தால் அடைந்த பத­வி­யல்ல.

நாட்டின் பெண் பிர­த­ம­ராக பத­வி­யேற்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்­சியம் அவ­ரது மனதில் நீண்ட கால­மாக வேரூன்றியிருந்­த­தாக அவ­ரது பல்­க­லைக்­க­ழக நண்­பர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இங்­கி­லாந்து திருச்­ச­பையைச் சேர்ந்த மதபோத­க­ரான ஹுபேர்ட் பிரெய்ஸர் மற்றும் ஸெய்டி மேரி ஆகி­யோ­ருக்கு ஒரே­யொரு பிள்ளையாக பிறந்த தெரேஸா மே, ஆரம்ப கால கட்­டத்தில் இங்­கி­லாந்து வங்கி மற்றும் கட்­டண தீர்ப்­ப­னவு சேவைகள் சங்கம் என்­ப­வற்றில் பணி­யாற்­றி­யி­ருந்தார். அத்­துடன் நகர சபை உறுப்­பி­ன­ரா­கவும் அவர் சேவை­யாற்­றி­யுள்ளார்.

1992 ஆம் ஆண்டில் பாரா­ளு­மன்ற ஆச­னத்­துக்கு போட்­டி­யிட்ட அவர் படு­தோல்­வியைத் தழு­வினார்.

எனினும் மனம் தள­ராது தொடர்ந்து முயற்­சியை முன்­னெ­டுத்த அவர் 1997 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவானார்.

இந்­நி­லையில் பல்­வேறு நிழல் அமைச்சுப் பத­வி­களை வகித்த தெரேஸா மே, 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் கூட்­ட­மைப்பு அரசாங்கம் ஸ்தாபிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து உள்­துறை செய­லா­ள­ராக பதவி நிய­மனம் பெற்றார்.

அந்தப் பத­வியில் 6 வருட காலம் சேவை­யாற்றி பிரித்­தா­னி­யாவின் அண்­மைக்­கால வர­லாற்றில் உள்­துறை செய­லா­ள­ராக அதிக காலம் சேவை­யாற்­றிய அர­சி­யல்­வாதி என்ற பெயரைப் பெற்றார்.

இறு­தியில் தனது இலட்­சியக் கன­வான பிர­தமர் பத­வியை அவர் அடைந்­துள்ளார்.

theresa-may-speech

குடி­யேற்றக் கொள்கை

தெரேஸா மே உள்­துறை செய­லாளர் என்ற வகையில் குடி­யேற்­றங்கள் தொடர்பில் கடும் போக்கைக் கொண்டு விளங்­கினார்.

பிரித்­தா­னி­யா­வி­லுள்ள குடி­யேற்­ற­வா­சிகள் மேல­தி­க­மாக 18,600 ஸ்ரேலிங் பவுணை வரு­மா­ன­மாக ஈட்­டினால் மட்­டுமே தமது வாழ்க்கைத் துணை­யையும் பிள்­ளை­க­ளையும் பிரித்­தா­னி­யா­வுக்கு வர­வ­ழைக்க அனு­ம­திக்கும் நடை­முறை உள்­ள­டங்­க­லான நடவடிக்கைகள் மூலம் நாட்­டுக்குள் பிர­வே­சிக்கும் குடி­யேற்­ற­வா­சி­களைக் குறைக்கும் முயற்­சியில் தெரேஸா மே ஈடு­பட்டார்.

2012 ஆம் ஆண்டு மேற்­படி குடி­யேற்­ற­வா­சி­களின் குறைந்­த­பட்ச வரு­மானம் தொடர்­பான தேவைப்­பாட்டை வலி­யு­றுத்தும் நடை­முறை அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­தி­லி­ருந்து அதனால் சுமார் 15,000 சிறு­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆய்­வொன்று கூறு­கி­றது.

தமது வாழ்க்கைத் துணை­யையும் பிள்­ளை­க­ளையும் பிரித்­தா­னி­யா­வுக்கு அழைத்து வரு­வ­தற்கு தேவை­யான பணத்தை உழைப்பதற்கோ பெறு­வ­தற்கோ முடி­யாது பலரும் மன அழுத்­தத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக மிடில் லெஸக்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்து குடி­யேற்­ற­வா­சிகள் நலன்­க­ளுக்­கான சபை மேற்­கொண்ட இந்த ஆய்வு தெரி­விக்­கி­றது.

மேற்­படி விதியை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யதன் மூலம் தெரேஸா மே, குடும்ப மீள் இணைப்பு செல்­வந்­தர்­க­ளுக்கு மட்­டு­மே­யான சிறப்புரிமை என்ற நிலையைத் தோற்று­வித்­துள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

அத்­துடன் கடந்த ஏப்ரல் மாதம் தெரேஸா மேயி­னது அலு­வ­லகம் பிரித்­தா­னி­யாவில் 10 வரு­டங்­க­ளுக்கும் குறைந்த காலம் வாழ்­ப­வர்கள் அந்­நாட்டில் நிரந்­த­ர­மாக குடி­யே­று­வ­தற்­கான உரி­மையைப் பெற வரு­ட­மொன்­றுக்கு குறைந்­தது 35,000 ஸ்ரேலிங் பவுணை வருமானமாக பெற வேண்டும் என்ற தேவைப்­பாட்டை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இதில் மருத்­து­வத்­தாதி தொழில் உள்­ள­டங்­க­லான சில தொழில்­க­ளுக்கு மட்­டுமே விதி­வி­லக்­க­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

பிரித்­தா­னி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக வரும் குடி­யேற்­ற­வா­சி­களை நாடு கடத்­து­வ­தற்கு ஐரோப்­பிய மனித உரி­மைகள் உடன்­ப­டிக்கை தடை­யா­க­வுள்­ளதால் அந்த உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து பிரித்­தா­னியா வாபஸ் பெறு­வ­தற்­கான சர்ச்­சைக்­கு­ரிய நகர்வை முன்­னெ­டுக்கும் தனது திட்டம் குறித்து தெரேஸா மே கடந்த ஏப்ரல் மாதம் தெரி­வித்­தி­ருந்தார்.

தெரேஸா மேயின் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்­பான கடும்­போக்கு நட­வ­டிக்­கைக்கு உதா­ர­ண­மாக, இஸ்­லா­மிய மத­கு­ரு­வான அபு கதாடாவை ஐரோப்­பிய மனித உரி­மைகள் நீதி­மன்­றத்­துடன் போராடி ஜோர்­தா­னுக்கு நாடு கடத்­திய விவ­காரம் கூறப்­ப­டு­கி­றது.

இதன் மூலம் அபு கதா­டாவை பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து வெளி­யேற்ற முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த 10 வருட கால சட்டப் போராட்­டத்தை அவர் முடி­வுக்கு கொண்டு வந்தார்.

இதன்­போது ஐரோப்­பிய மனித உரி­மைகள் நீதி­மன்றம் அபு கதா­டாவை ஜோர்­தா­னுக்கு நாடு கடத்­து­வது, அவர் அந்­நாட்டில் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளா­கு­வ­தற்கு வழி­வகை செய்­வ­தாக உள்­ள­தாக எச்­ச­ரித்­தி­ருந்­தது.

ஐரோப்­பிய மனித உரி­மைகள் உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து வாபஸ் பெறு­வது தொடர்­பான தெரேஸா மேயின் யோசனை, வட அயர்­லாந்தில் சமா­தா­னத்தைக் கொண்டு வந்த ‘குட் பிறைடே’ உடன்­ப­டிக்­கையை மீறு­வ­தாக உள்­ளது என குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது…

ஐரோப்­பிய மனித உரி­மைகள் உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து வில­கி­யி­ருக்க தெரேஸா மே திட்­ட­மிட்­டி­ருந்த போதும், ஐரோப்­பிய ஒன்றியத்தில் பிரித்­தா­னியா இணைந்­தி­ருப்­ப­தற்கு ஆத­ர­வா­கவே பிர­சாரம் செய்­து­வந்­துள்ளார்.

UK-PM-Cameron-leaves-daughter-8-in-pub-861L9IEO-x-largeபிறிக்ஸிட்’ தொடர்­பான நிலைப்­பாடு

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா வில­கு­வ­தற்கு ஆத­ர­வ­ளித்து இடம்­பெற்ற ‘பிறிக்ஸிட்’ வாக்­கெ­டுப்பின் கருத்து ‘பிறிக்ஸிட்’ என்­பதே என குறிப்­பிட்­டுள்ள தெரேஸா மே, ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வில­கலை உரிய முறைப்­படி மேற்­கொள்­வ­தற்கு ஏற்­க­னவே உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இந்­நி­லையில் அவரால் புதி­தாக ஸ்தாபிக்­கப்­படும் அமைச்­ச­ரவை நிய­ம­னங்­களில் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரிவதற்கு ஆதரவளித்த­வர்­களை நிய­மனம் செய்­வ­தற்கு அவ­ரது கட்­சியைச் சேர்ந்த ‘பிறிக்ஸிட்’ ஆத­ர­வா­ளர்கள் அழுத்தம் கொடுப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதே­ச­மயம் பெண் அர­சி­யல்­வாதி என்ற வகையில் அவ­ரது அமைச்­ச­ர­வையில் முக்­கிய அமைச்சுப் பொறுப்­புக்­களில் இது­வ­ரையில் இல்­லாத வகையில் பெரு­ம­ளவில் பெண்கள் நிய­மனம் பெறு­வார்கள் என அர­சியல் அவ­தா­னிகள் கரு­து­கின்­றனர்.

பிரித்­தா­னிய தேசிய ஆவணக் காப்­ப­கத்­தி­லி­ருந்து 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளி­யான ஆவ­ணங்­களின் பிர­கா­ரம், அந்­நாட்டின் முதல் பெண் பிர­த­ம­ரான மார்க்ரெட் தட்சர் பத­வி­யேற்­ற­வுடன், பிரித்­தா­னி­யாவில் அள­வுக்­க­தி­க­மான ஆசிய குடியேற்றவாசிகள் இருப்­ப­தாக தனிப்­பட்ட முறையில் முறைப்­பாடு செய்­தி­ருந்­த­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

மேற்­படி தக­வல்கள் மார்க்ரெட் தட்­சரின் இனம், குடி­யேற்றம் மற்றும் அர­சியல் ரீதி­யான திரை­ம­றை­வான மனோ­பா­வத்தை வெளிப்படுத்­து­வ­தாக உள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

இந்­நி­லையில் பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­த­ம­ரான தெரேஸா மேயின் குடியேற்றவாசிகள் தொடர்பான கடும்போக்குக் கொள்கைகள், மார்க்ரெட் தட்சரின் குடியேற்றவாசிகள் தொடர்பான மனோபாவத்துடன் மாறுபட்டிருக்கவில்லை என்பது கண்கூடு.

தெரேஸா மே, மார்க்ரெட் தட்சரைப் போன்று முக்கிய அரசியல் தீர்மானங்களை எடுப்பதில் உறுதிப்பாட்டுடன் இருக்கின்றாரோ இல்லையோ, குடியேற்றவாசிகள் விடயத்தில் அவரை விடவும் திடசித்தமுள்ள இரும்புப் பெண்மணியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியேற்றவாசிகளின் அளவுக்கதிகமான வருகையால் முகஞ் சுளித்துக் கொண்டிருக்கும் பிரித்தானிய பிரஜைகள் பலரைப் பொறுத்தவரை தெரேஸா மேயின் குடியேற்றவாசிகள் தொடர்பான திட்டங்கள் வரவேற்புக்குரியவைகளாக இருக்கலாம். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அவரது திட்டங்கள் கேள்விக்குரியவையாகும்.

சொந்த நாட்டில் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகி வரும் அகதிகளுக்கு இடமளிக்க மறுப்பது, அதை மீறி வருபவர்களுக்கு பலவகையிலும் அழுத்தம் கொடுத்து அவர்களை பிரித்தானியாவை விட்டு வெளியேறத் தூண்டுவது என்பன சர்வதேச மனிதாபிமான கொள்கைகளுக்கு முரண்பாடான செயற்பாடுகளாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிவது தொடர்பான பொதுமக்களின் எதிர்பார்ப்பை ஏற்றுக் கொண்டு தனது எதிரான நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொண்டது போன்று குடியேற்றவாசிகள் விவகாரத்திலும் தனது கடும்போக்கை அவர் எதிர்காலத்தில் தளர்த்திக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-ஆர்.ஹஸ்தனி-

Share.
Leave A Reply