யாழ்.பல்கலைக் கழகத்தில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் கலவரமாகியுள்ளநிலையில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த பகுதியில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, பல்கலைக்கழகத்திற்குள் இருந்து சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன சேதமடைந்துள்ளதாகவும் பல்கலைக்கழக கட்டடத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திசேகரிப்பிற்காக குறித்த பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கும் மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுவருவதால் யாழ்.பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றவேளையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு இடம்பெறுவதாகவும் இம்முறை வழமைக்கு மாறாக கண்டிய நடனத்துடன் குறித்த நிகழ்வு ஆரம்பமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கண்டிய நடனமே இம் மோதல் நிலைமைக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த நிகழ்வும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக வளாகம் யுத்தக்களம் போல் காட்சியளிப்பதாகவும் தமிழ், சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கம்பி மற்றும் பொல்லுகளுடன் நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மோதல் நிலைமை மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும் கலகமடக்கும் பொலிஸார் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்று செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியளார்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.