முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
2006ம் ஆண்டு மிக் விமானங்கள் நான்கு கொள்வனவு செய்யப்பட்ட சம்பவம் குறித்து சரியான முறையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால், கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை ரத்துச் செய்யப்படலாம் என அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய தற்போது வரையில் மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மிக் தாக்குதல் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தப்பட்ட மூல ஆவணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோத்தபாயவால் ஆளும் கட்சிக்குள்ளேயே இருப்பிரிவுகள்
22-07-2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் நிதி மோசடி, ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம், தாஜுடின், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலை உள்ளிட்ட பல விடயங்களின் சந்தேக நபரான கோத்தபாய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தி வருவதாக முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்
எனினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை கைது செய்வதற்கு ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரின் கருத்தின் அடிப்படையில் ஆளும் கட்சிக்குள்ளேயே இருப்பிரிவுகள் வெளிப்படையாக உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.