நாடுதிரும்பிய காதலியை விமான நிலையத்தில் வரவேற்கும் போது அவருக்கு இன்ப அதிர்சி கொடுப்பதற்காக விமானநிலைத்திற்குள் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து சென்ற முஸ்லிம் இளைஞனை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமாநிலைய பொலிஸார், இன்று சனிக்கிழமை(23) காலை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞனின் காதலி, நோர்வையிலிருந்து இன்றுக்காலை 11 மணிக்கு நாடு திரும்பினார்.
அவரை வரவேற்பதற்கான அப்பெண்ணின் காதலனான 28 வயதான இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளை வரவேற்கும் பகுதிக்கு சென்றுள்ளனர்.
கொழும்பு 12 யைச் சேர்ந்த சந்தேகநபர் அப்பகுதிக்கு சென்றதுடன், தாங்கள் கொண்டுச் சென்ற பர்தாவை, விமான நிலையத்தின் மலசலக்கூடத்துக்கு சென்று மாற்றிக்கொண்டு மீண்டும் வரவேற்கும் பகுதிக்கு வந்து அமர்ந்துகொண்டனர்.
இவ்விருவரின் நடமாட்டம் தொடர்பில் சந்தேகம் ஏற்படவே அவ்விருவரையும் விமானநிலைய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், நாடு திரும்பிய கைது செய்யப்பட்டவரின் காதலியை புலனாய்வு பிரிவினர் அழைத்துவந்து இருவரையும் விசாரணைக்குட்படுத்திய பின்னர் கட்டுநாயக்கா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இவர்கள், தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்