கொழும்பு பொரளையில் உருவாகிய இனக்கலவரம் ஆடிக்கலவரமாக உருவெடுத்து தமிழ் மக்களின் உயிர்கள், உடைமைகள் என்பவற்றைப் பெரிய அளவில் அழித்தொழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மறுநாளாகிய ஜூலை மாதம் 24 ஆம் திகதி பரவிய காட்டுத் தீ போன்ற வதந்திகள் கொழும்பு மாநகரத்தைச் சுடுகாடாக்கியது. இந்த நிலைமை 30 ஆம் திகதி வரையில் மிக மோசமாகத் தொடர்ந்தது.
முப்பத்திமூன்று வருடங்களுக்கு முன்னர் அன்றைய தினமும் இதுபோன்றதொரு சனிக்கிழமைதான். இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் இராணுவ வாகனத் தொடரணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவ ஜீப் மற்றும் ட்ரக் வண்டியொன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
முன்னால் சென்று கொண்டிருந்த ஜீப் கண்ணிவெடி தாக்குதலுக்கு உள்ளாகியதில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு உதவுவதற்காக பின்னால் வந்த இராணுவ ட்ரக் வண்டியில் இருந்து இறங்கிய இராணுவத்தினர் மீது மறைந்திருந்த விடுதலைப்புலிகள் சரமாரியாகத் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் நேர்ந்தது.
இந்தத் தாக்குதலில் 13 இராணுவத்தினருடன் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தராகிய செல்லக்கிளி அம்மானும் கொல்லப்பட்டார்.
விடுதலைப்புலிகளினால் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது பெரும் தாக்குதல் இது என்று வர்ணிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலே 1983 ஜூலை கலவரத்திற்கு வித்திட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு எதிரான தமிழர் தரப்பின் ஆயுதப் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பெரிய தாக்குதல் இதுவாகும்.
அது மட்டுமல்ல; தமிழ் இளைஞர்களின் வீரம், சுமார் 30 வருட கால யுத்தத்திற்கு இந்தச் சம்பவமே பிள்ளையார் சுழியிட்டிருந்தது.
ஆயினும் இந்தத் தாக்குதலின் உடனடி எதிரொலியாக கொழும்பு பொரளையில் உருவாகிய இனக்கலவரம் ஆடிக்கலவரமாக உருவெடுத்து தமிழ் மக்களின் உயிர்கள், உடமைகள் என்பவற்றைப் பெரிய அளவில் அழித்தொழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மறுநாளாகிய ஜூலை மாதம் 24 ஆம் திகதி பரவிய காட்டுத் தீ போன்ற வதந்திகள் கொழும்பு மாநகரத்தைச் சுடுகாடாக்கியது. இந்த நிலைமை 30 ஆம் திகதி வரையில் மிக மோசமாகத் தொடர்ந்தது.
கொல்லப்பட்ட இராணுவத்தினரை அவர்களின் குடும்பத்தினரிடம் கையளிப்பதற்குப் பதிலாக பொரளை மயானத்தில் இறுதிக்கிரியைகளை நடத்துவது என்றும் அதில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, பிரதமர் ரணசிங்க பிரேமதாசா மற்றும் அமைச்சரவையினர் கலந்து கொள்வது என்றும் அவசரமாகக் கூடிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், இந்தத் தாக்குதல் பற்றி பரவிய பல்வேறு வகையான தகவல்கள் வதந்திகளினால் பொரளை கனத்தை பகுதியில் மூவாயிரம் பேரளவில் கூடினர்.
கொல்லப்பட்ட இராணுவத்தினருடைய சடலங்களை அவர்களுடைய உறவினர்களிடம் கையளிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து இரத்மலானை விமானத்தளம் ஊடாக பொரளை மயானபூமிக்கு மாலை 5 மணிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்ட இராணுவ சடலங்கள் இரவு 8.30 மணியளவிலேயே இரத்மலானை விமான தளத்திற்கு வந்து சேர்ந்தன.
அங்கிருந்து அந்த சடலங்கள் இராணுவ தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலும் தாமதமாகிய அதேவேளை, பொரளை பகுதியில் கூடியிருந்த கூட்டம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து, எண்ணாயிரத்தைத் தாண்டியது.
பொரளை பகுதியில் உள்ள சேரிப்பகுதி மக்களே முதலில் அங்கு ஆயிரக்கணக்கில் கூடினர். அதனைத் தொடர்ந்து நேரம் செல்லச் செல்ல வேறு இடங்களில் இருந்தும் மக்கள் அங்கு வந்து குழுமினர்.
முடிச்சுமாறிகள், குற்றச் செயல்களையே தமது ஜீவனோபாயமாகக் கொண்டிருந்த குழுவினரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். குடும்பங்களிடம் சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டம் ஆவேசம் கொண்டது.
கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளைப் பயன்படுத்தினர்; குண்டாந்தடியடிப் பிரயோகமும் நடத்தப்பட்டது,
கலகம் அடக்கும் பொலிஸாரினால் கலவரத்தை அடக்க முடியவில்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, இராணுவத்தினரிடம் பொறுப்பு கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. கூட்டம் கலைந்தது. ஆனால் அமைதி ஏற்படவில்லை.
கலைந்த கூட்டம் பொரளை நகரில் உள்ள தமிழ்க்கடைகளைத் தாக்கியது தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்த அடுக்கு வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகின.
பொரளையில் இருந்து படிப்படியாக தமிழரைத் தாக்கும் காடையர் கூட்டம் பெருகி கொழும்பு நகரின் பல இடங்களுக்கும் பரவிச் சென்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலைமை 30 ஆம் திகதி வரையில் ஒரு கிழமை நீடித்ததில் சுமார் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினர் தமிழ் மக்களின் வர்த்தக சொத்துக்கள் கொழும்பில் மட்டுமல்லாமல் மலையகம் உட்பட தெற்கில் நாட்டின் பல பகுதிகளிலும் பல நகரங்களிலும் அடித்து நொறுக்கப்பட்டன. தீயிட்டு அழிக்கப்பட்டன கோடிக்கணக்கான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாகினர். கொழும்பின் பல இடங்களிலும் அகதி முகாம்கள் உருவாகின. இந்தியாவில் இருந்து வருகை தந்த கப்பலில் கடல் மார்க்கமாக தமிழர்கள் வடபகுதிக்கு – யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதை விட விரட்டி அடிக்கப்பட்டனர் என்றே கூற வேண்டும்.
ஜூலை கலவரம் ஆரம்பமாவதற்கு முன்பே சிறு சிறு இனக்கலவர அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.
அதேபோன்று 1958 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து வாகனங்களில் சிங்கள எழுத்தாகிய ஸ்ரீ என்ற எழுத்து சிங்களத்தில் பொறிக்கப்பட்டது.
இதனைத் தமிழில் பொறிக்க முற்பட்டனர் சிலர். சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் பெயர்ப்பலகைகளில் தமிழ்ப் பெயர்களுக்கு தார் பூசி அழிக்கப்பட்டது. சில இடங்களில் சிங்களப் பெயர்களுக்கு இந்தக் கதியேற்பட்டது,
கறுப்பு ஜூலை கலவரத்தின்போது மண்ணெண்ணெய் மற்றும் பெற்ரோல் கொள்கலன்களுடனும் பொல்லுகள், கோடரிகளுடனும் திரிந்தது போன்று 1958 ஆம் ஆண்டு தார் நிரப்பிய வாளிகளுடனும் வாள்கள், கத்திகளுடனும் காடையர் கூட்டம் திரிந்தது பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழியைக் கண்ட இடத்தில் தார்பூசி அழித்தது மட்டுமன்றி கண்ணில் அகப்பட்ட தமிழர்களைத் தாக்கியது.
பல இடங்களில் கொதிக்க வைத்த தார் நிறைந்த பரல்களில் பலரைத் தூக்கிப் போட்டு இனந்தெரியாத காரணத்திற்காகப் பழி வாங்கி தங்களுடைய கோபத்தைத் தீர்த்துக் கொண்டனர்.
ஆனால், கறுப்பு ஜூலை கலவரத்தின் போது வீடுகளிலும் கொட்டில்களிலும் வர்த்தக நிலையங்களிலும் இருந்தவர்கள் உள்ளே இருக்கத்தக்கதாக தீயிட்டு கொளுத்தப்பட்டார்கள்.
அப்பாவிகளான தமிழர்கள் மீது அடையாளமே தெரியாத சிங்களக் காடையர்கள், உடமைகளைக் கொள்ளையிட்டும், தாக்குதல் நடத்தியும், தீயிட்டும் தமது காரணமே இல்லாத கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். சம்பந்தமே இல்லாத ஒரு செயலுக்காக பழி தீர்த்துக் கொண்டார்கள்.
கறுப்பு ஜூலை கலவரத்திற்கு முன்னதாக தமிழ் தரப்பினருக்கும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அரச தரப்பினருக்கும் ஏற்பட்டிருந்த அரசியல் பிணக்கு காரணமாக தெருச்சண்டியர் பாணியில் இயலுமென்றால் மோதிப்பாருங்கள். போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம் என்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன சூளுரைத்திருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே கறுப்பு ஜூலை கலவரம் வெடித்திருந்தது. இந்தக் கலவரத்தின் மூலம் சிங்கள இனமே கூனிக்குறுகத் தக்க வகையில் வன்செயல்கள் தலைவிரித்தாடின.
உடனடியாக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முடியவில்லை. மாறாக வெலிக்கடை சிறைச்சாலைக்கும் கலவரம் பரவியது.
அங்கு தமிழ்க்கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் 50க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதை செய்து காட்டு மிராண்டித் தனமாகக் கொல்லப்பட்டனர்.
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையானது கறுப்பு ஜூலை கலவரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களின் உச்ச கட்ட காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தியிருந்தது.
கறுப்பு ஜூலை கலவரமானது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே இடம்பெற்றது.
இதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்த போதே, யாழ்ப்பாணத்தில் 1981 ஆம் ஆண்டு தமிழரின் கலாசாரப் பொக்கிஷமாக விளங்கிய யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது.
இந்த நாட்டின் இனப்பிரச்சினையானது, வன்முறை மட்டத்திற்கு உயர்வதற்கும், தமிழ் இளைஞர்கள், தமிழர்களை அரச பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்குமாக ஆயுதமேந்துவதற்கு தீவிரமான தூண்டுதலை அளிப்பதற்கும் கறுப்பு ஜூலை கலவரமும், யாழ். நூலக எரிப்புமே முக்கிய சம்பவங்களாக அமைந்தன.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலே கறுப்பு ஜூலை கலவரத்திற்கு தூண்டுகோலாக அமைந்தது என்பது மேலோட்டமான காரணமாக இருந்த போதிலும், கறுப்பு ஜூலை கலவரத்தின் ஊடாக தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏற்கனவே அரச தரப்பில் ஒரு திட்டம் இருந்தது என்ற விடயம் கறுப்பு ஜூலை கலவரம் பற்றிய விசாரணைகளின் போது வெளிப்பட்டிருந்தது.
வட்டுக்கோட்டையில் தனிநாட்டுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசாங்கத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் உட்பட பலதரப்பட்ட வழிகளில் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்த தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டத்தை நசுக்குவதற்காக பல்வேறு வடிவங்களில் அரச பயங்கரவாதம் அரங்கேற்றப்பட்டிருந்தது. அவற்றில் யாழ் நூலக எரிப்பும், 1983 கறுப்பு ஜூலை கலவரமும் மிக மிக முக்கிய சம்பவங்களாகக் கருதப்படுகின்றன.
கல்வி, விளையாட்டு, வர்த்தகம், அரச நிருவாகம், பொதுத் துறை செயற்பாடுகள் என பல வழிகளிலும் கொடிகட்டிப் பறந்த தமிழரை பெட்டிப்பாம்பாக அடக்கி ஆள முற்பட்டதன் உச்சகட்ட வெளிப்பாடாகவே கறுப்பு ஜூலை கலவரம் நோக்கப்படுகின்றது.
அத்தகைய கலவரத்திற்குக் காரணமானவர்களை விசாரணைகளின் மூலம் கண்டறிவதற்கு அரசாங்கம் முனையவில்லை.அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
சன்சோனி கமிஷன் என்ற பெயரில் ஒரு விசாரணை நடைபெற்ற போதிலும் அதுவொரு கண்துடைப்பு விசாரணையாகவே நடந்தேறியது.
முப்பத்திமூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், கறுப்பு ஜூலை கலவரத்திற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாதது போலவே, அந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதிச் செயற்பாட்டு கட்டமைப்பினால் இதுவரையில் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவில்லை; தண்டிக்கப்படவுமில்லை.
உள்ளக விசாரணைகள் எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்று இப்போது தமிழ் மக்களும் அவர்களைச் சார்ந்த புத்திஜீவிகளும் கூறுவதற்கு கறுப்பு ஜூலை கலவரத்தின் கொடுமைகளுக்கு நீதி கிடைக்காத அனுபவமும் ஒரு முக்கிய காரணமாகும்.
கறுப்பு ஜூலை கலவரத்தின் கொடுமைகள் தமிழ் மக்களின் மனங்களில் இன்னும் ஆறாத வடுவாகப் படிந்துள்ளது போலவே, மனிதாபிமானமுள்ள சிங்கள மக்கள் மனங்களிலும் இந்த வடு ஆறாத வடுவாக அமைந்திருக்கின்றன.
கறுப்பு ஜூலை கலவரத்தின்போது எந்த அளவுக்கு சிங்களக் காடையர்கள் கொடூரமான முறையில் நடந்து கொண்டார்களோ அதே அளவுக்கு கருணை மிகுந்தவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் மனிதாபிமானம் நிறைந்த சிங்கள மக்களில் பலர் நடந்து கொண்டிருந்தனர் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது.
கறுப்பு ஜூலை கலவரத்தின் போது இடம்பெற்ற அநியாயங்கள், அட்டூழியங்களை எண்ணியெண்ணி எத்தனையோ சிங்கள உள்ளங்கள் கண்ணீர் சிந்தியிருக்கின்றன. சிங்களக் காடையர்களின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்காக வெட்கித் தலைகுனிந்து என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிய நல்ல சிங்கள உள்ளம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
தமிழராயினும்சரி, சிங்களவர்களாயினும் சரி அவர் கள் மனிதர்களே. மனித இயல்பின்படி, நல்லதும் கெட்டதும் ஒன்றே.
ஓரினத்தவருக்கு நல்லதாகப்படு வது மற்ற இனத்தவருக்கு மனிதர்கள் என்ற ரீதியில் பிழையானதாகப்படுவதில்லை. அரசியல் நோக்கங் களும், இனவாத மனப் போக்கு கொண்ட செயற்பாடு களுமே தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் இந்த நாடு எட்டத்தில் பிரித்து வைத்திருக் கின்றது.
மனிதாபினமானத்தின் அடிப்படை யிலான அரசியல் செயற்பாடுகள் இனத்துக்கும் மதத்திற்கும் முக்கி யத்துவம் கொடுப்பதில்லை. முன்னுரிமை அளிப்பது மில்லை. அந்தச் செயற்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டின் நலன்களையே முதன்மைப்படுத்தியதாக அமைந்திருக்கும்.
மோசமான இன ரீதியான வன்முறைகளுக்கும், மத ரீதியான வன்செயல்களுக்கும், முப்பது வருடகால ஆயுத முரண்பாட்டு அழிவுகளுக்கும் முகம் கொடுத்த, மிகுந்த கசப்பான அனுபவங்களைக் கொண்டுள்ள இலங்கை மக்கள் இனிமேலும் அரசியல் இலாபங்களுக்காக இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிந்து நின்று செயற்படுவது எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
வெளிப்படையான வன்முறைகள், வன்செயல்களுக் குத் தூண்டி வந்த அரசியல்வாதிகள் இப்போது மறை முகமான முறையில் இனங்களுக்கிடையில் சாதாரண சிறு சிறு விடயங்களில் பிரிவுகளையும் பகை உணர்வு களையும் தூண்டி வருகின்றார்கள்.
-பி.மானிக்கவாசம்-