குமாரபுரம் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை வழங்குங்கள். இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இது அரசு தரப்பு சட்டத்தரணி சுதர்சன டீ. சில்வாவின் வாதம்.
திடீரென சூடு விழுந்தது. அப்போது என் மகள் சூடுபட்ட நிலையில் எனது கையில் விழுந்து தண்ணீ தண்ணீயென கதறியழுதாள்.
விடிய விடிய ஏதும் செய்யமுடியாதபடி என் பிள்ளையை கையில் தாங்கியிருந்தேன். விடியும்போது அவள் செத்துக்கிடந்தாள். இது ஒரு அம்மாவின் கதை.
நானும் தனலட்சுமி அக்காவும் பாரதிபுரத்திலிருந்து கிளிவெட்டிக்கு டியூஷனுக்குப் போய்வருவோம்.
என்னை அவள்தான் சைக்கிளில் ஏந்திவருவாள். சம்பவம் நடைபெற்ற தினம் நாமிருவரும் குமாரபுரம் பகுதிக்கு வரும்போது இராணுவத்தினர் தாறுமாறாக சுட்டவண்ணம் எம் எதிரே வந்தனர்.
பாதுகாப்புத் தேடி தேநீர்க் கடைக்குள் புகுந்தோம். எம்முடன் பலர் புகுந்தனர். இராணுவத்தினர் சுற்றிவளைத்து நின்று சுட்டார்கள். நான் கீழே விழுந்து படுத்துவிட்டேன்.
சுட்டவெடிகள் என் காலில் பட்டு நான் மயங்கிவிட்டேன். மறுநாள் தான் தெரியும் அக்கா தனலட்சுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்று.
நீதிமன்றில் சாட்சியமளித்த ஜோசப் மோசஸ் அன்டனியின் வாக்குமூலம் இது வீதிவழி இராணுவம் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்த வண்ணம் வந்தபோது பயத்தின் காரணமாக சுமார் 20 பேர் எனது கடைக்குள் புகுந்தனர்.
பூட்டப்பட்ட கடைக்கதவின் ஓட்டைக்குள்ளால் கபில என்பவன் சுட்டான். பின்னர் கதவை உடைத்து சுட்டான். பலர் ஸ்தலத்திலேயே இறந்தனர். இச்சம்பவத்தில் சீரழிக்கப்பட்ட 16 வயது நிரம்பிய மாணவி அருமைத்துரை தனலட்சுமியும் எனது கடைக்குள் ஒளிந்து இருந்தாள்.
எல்லோரும் வெளியே ஓடிய போதும் அவள் கடைக்குள் இருந்தாள். அவளை இராணுவத்தினர் இழுத்துச் சென்று அருகிலுள்ள பாழடைந்த பால்சேகரிப்பு நிலையத்துக்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
மறுநாள் பார்த்தபோது குறித்த பெண்ணின் உடல் பனையோலையால் மூடப்பட்டிருந்தது. தேநீர்க் கடை வீரசாமிகாளி முத்துவினால் (11.06.2015) அளிக்கப்பட்ட சாட்சியமிது.
இருபது வருடங்களுக்கு முன் (1996 பெப்ரவரி 11) கிளிவெட்டி கிராமத்துக்கு அருகிலிருக்கும் தெஹிவத்தை இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவத்தினர் மதுபோதையில் குமாரபுரம் என்னும் கிராமத்துக்குள் புகுந்து மூர்க்கத்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்து 26 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த “குமாரபுரம் படுகொலை” சம்பந்தமான விசாரணைகள் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு (2016 ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில்) அநுராதபுரம் மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அழைப்பாணை விடுக்கப்பட்ட சாட்சியாளர்கள் மேற்படி சாட்சியங்களை அளித்துள்ளனர்.
அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் முன்னாள் தெஹிவத்தை இராணுவ முகாமைச்சேர்ந்த 6 இராணுவத்தினருக்கு எதிராக தலா 101 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் மேற்படி வழக்கு ஜூரி சபை முன் விசாரிக்கப்பட்ட போது,
இதற்கான சாட்சியங்களை மூதூர் பொலிஸார் நெறிப்படுத்தி அனுராதபுரம் மேல்நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையின்போது ஆஜர்படுத்தியிருந்தனர்.
சம்பவங்களை நேரில் கண்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என 20 பேருக்கு சாட்சியாளர்களாக அழைப்பு விடுக்கப்பட்டபோதும் நான்குபேர் மரணித்த காரணத்தினால் 16 பேர் சாட்சியமளித்தனர்.
மாரிமுத்து மகேஸ்வரன் (58), மகேஸ்வரன் சுகந்தினி (24), ஜே.ஜெயநாதன் (46), சிவகுணம் புவிதரன் (42), இராசதுரை சத்தியபாமா (37), கணபதிப் பிள்ளை குமுதினி (45), நந்தகோபால் நாக நந்தினி (32), அழகுதுரை புவனேந்தினி (23), திருப்பதி மஞ்சுளா தேவி (24), மாரிமுத்து துரைராஜா (60), லட்சுமி (49), இராசையா நாகேஸ்வரி, வீரசாமி காளிமுத்து, நடராஜா தவமணி, தங்கவேல் மருதாய், கணபதிப் பிள்ளை சிவனேசன், தங்கவேல் கோணேஷ்வரன் (37), ஸ்டீபன் லட்சுமி, ஜோசப் மோசஸ் அன்டனி, சுப்பிரமணியம் இராசலிங்கம் ஆகியோருடைய சாட்சியங்கள் நீதிமன்றில் அளிக்கப்பட்டன.
சாட்சியம் அளித்தவர்களின் வயதுகளை 20 வருடங்கள் கழித்துப் பார்ப்போமாயின் சம்பவம் நடைபெற்ற காலத்து வயதுகளைத் தெரிந்துகொள்ள முடியும்.
குமாரபுரக்கிராமம், திருகோணமலை, மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் (ஏ.15) கிளிவெட்டி கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வடக்குப் பக்கமாக மூதூரையும் எல்லைப்படுத்தியிருக்கும் ஒரு குக்கிராமமாகும்.
1981 ஆம் ஆண்டளவில் இக்கிராமம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரையின் சகோதரரான குமாரதுரையால் 46, ஏழைக் குடும்பங்களுக்கென உருவாக்கப்பட்ட கிராமமாகும்.
குமாரபுரம் படுகொலைச் சம்பவம் நடைபெற்ற காலத்தில் இக்கிராமத்தில் சுமார் 74 குடும்பங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகமிக மோசமான வறுமைகொண்ட இக்கிராம மக்கள் மலையக வம்சாவளியை பூர்வீகமாகக் கொண்டவர்களாகவும் அயல் கிராமங்களின் கூலிகளாகவும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
தெற்கே அல்லைக்குளமும் வடக்கே வளம் கொண்ட வயல்வெளிகளும் கிழக்கே நெற்சந்தைப்படுத்தும் பாரிய கட்டடமும் மேற்கே வயல்வெளிகளும் கொண்ட இக்கிராமத்தில் ஓலைக்கொட்டில்களிலும் குச்சு வீடுகளிலும் நாகரிகம் உள்நுழையாத இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் தான் படுகொலை செய்யப்பட்டார்கள்.
குமாரபுரம் படுகொலைகள் (11.02.1996) எவ்வாறு நடந்தது என்பது பற்றிய பின்னணியை மக்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் உத்தியோகப்பற்றற்ற முறையில் இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.
குமாரபுரத்துக்கு மிக அருகில் இருக்கும் ஒரு சிங்களக்கிராமம் தெஹிவத்தை கிளிவெட்டியிலுள்ள இராணுவ முகாமுக்கு சம்பவ தினம் மாலை (11.02.1996) மாலையுணவு தெஹிவத்தை இராணுவ முகாமிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இது தினந்தோறும் நடைபெற்றுவருவது வழக்கம். சம்பவதினம் சி.ஐ.டி.பாலம் என அழைக்கப்படும் பாலத்தின் கீழ் மறைந்திருந்த ஆயுததாரிகளால் உணவு கொண்டுவந்த இரு இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இராணுவ வீரர்கள் ஸ்தலத்திலேயே பலியானார்கள்.
ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு குறுக்குப்பாதை வழியாக மேற்படி குமாரபுரம் கிராமத்துக்குள் வந்து ஒளிந்திருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்திகள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களால் இல்லாததும் பொல்லாததுமாக தெஹிவத்தை இராணுவ முகாமுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்கள் இருவர் ஆயுத தாரிகளினால் சுடப்பட்டதன் எதிரொலி சுமார் 60 நிமிடங்களுக்குள் பிரதிபலிக்கத் தொடங்கியது.
தெஹிவத்தை இராணுவ முகாமிலிருந்து சாரிசாரியாக குமாரபுரத்தை நோக்கி ஓடி வந்த இராணுவ வீரர்கள் வழிநெடுக துப்பாக்கிப் பிரயோகம் செய்த வண்ணம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்கள்.
மக்கள் தெரிவித்த தகவல்களின்படி வானை பிளக்கும் அளவுக்கு துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
எதிரே வந்த மக்கள் கண்மண் தெரியாமல் சுடப்பட்டார்கள். அவலக்குரல்களுடன் அங்கும் இங்கும் பீதியோடு ஓடும் மக்கள் கூட்டத்தை நோக்கி ஈவிரக்கமின்றி துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அன்றைய படுகொலையில் குமாரபுரத்தைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 26பேர் மேற்படி இராணுவத் தாண்டவத்துக்கு பலியானார்கள். சு.சிவராஜா (70), கி.கோவிந்தன் (72), சி.சின்னத் துரை (56), வ.நடராஜா (22), சு.லட்சுமி (35),
அ.கமலாதேவி (35), சு.பாக்கியம் (30), அ.வள்ளிப்பிள்ளை (28), செ.பாக்கியம் (26), பாக்கியராஜா வசந்தினி (6), ஆ.அன்னம்மா, ச.தனலட்சுமி (16), ரா.கமலேஸ்வரி (13), த.கலா (12), அ.ரஜினிகாந்தி (10), தீ.பத்மினி ( 9), சி.பிரசாந்தினி (6), சு.சுபாஜினி (3), து.கருணாகரன் (15), க.சுவாதிராஜா (15), வி.சுதாகரன் (14), த.நிஷாந்தன் (11), சு.பிரபாகரன் (11), அ.பரமேஸ் (30).
இச்சம்பவத்தில் சிறுவர் கள், ஆண்கள், பெண்கள் என 26 பேர் படுகொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு பாடசாலை மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுமோசமாக கொல்லப்பட்டதாக சாட்சியங்கள் தெரிவித்திருந்தன.
காய்கறித்தோட்டத்துக்கு நீர்பாய்ச்ச சென்ற கணவனை விடியவருவார், ஒளிச்சிருந்து வருவார், உயிர்தப்பிவருவார் என விடிய, விடிய காத்திருந்த மனைவி எப்ப விடியுமெனக் காத்திருந்த மனைவிக்கு கணவன் தோட்டத்தில் ஒரு மூலையில் நூற்றுக் கணக்கான சன்னங்கள் பாய்ந்திருக்க கோடரியால் சிதைக்கப்பட்டு பாம்பு புற்று அருகே விவசாயி சிவக்கொழுந்து சின்னத்துரை (58) படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தமை. எனது பிள்ளையை சுட்டுவிட்டார்கள் சுட்டுவிட்டார்கள் என கதறிக்கொண்டு தகப்பன் ஒருவர் தனது 12 வயதுபிள்ளைகளை கையில் தூக்கியபடி ஓடிக் கொண்டிருந்த காட்சி.
அழகான அந்த குமரிப்பிள்ளை தனது கிராமமான பாரதிபுரத்திலிருந்து கிளிவெட்டிக்கு டியூஷனுக்கு போய் திரும்பிக் கொண்டிருந்தவேளை இடையில் அகப்பட்டுக் கொண்ட இப்பெண் (தனலட்சுமி) பாலியல் கொடுமையின் அட்டூழியங்கள் உடலெல்லாம் எழுதப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டமை போன்ற அந்த மரணத் திருவிழா பற்றி குமாரபுரம் மக்கள் கண்ணீரோடு உரைப்பதைக் கேட்க முடியும்.
குமாரபுரச் சம்பவம் நடைபெற்று சுமார் நான்கைந்து நாட்களுக்குப் பின் ஒரு இராணுவ வீரர் கிராமத்துக்குள் வந்து இப்படிக் கூறியிருக்கிறார்.
நானே அப்பெண்ணைச் சுட்டேன். அவள் எமது சகாக்களால் கற்பழிக்கப்பட்ட கொடுமையை என்னால் பார்க்க முடியவில்லை. தாங்கிக் கொண்டிருக்க முடியவில்லை. அப் பெண் உயிரோடு இருப்பதில் இனி எவ்வித பயனுமில்லையென்ற காருண்ய நோக்கில் காருண்யக் கொலை செய்தேன்.
அவ்வளவு கொடுமை நிறைந்த சம்பவமிது. நடைபெற்ற கொடுமையை என்னால் தடுக்க முடியாமல் போய்விட்டது. சகிக்கமுடியாத நிலையிலையே சுட்டேன் என அந்த இராணுவ வீரர் மக்களிடம் கூறியதாக குமாரபுரவாசி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெற்றதைக் கேள்வியுற்ற அன்றைய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அ.தங்கத்துரை சம்பவ இடத்துக்குச் சென்று மரணித்த உடல்களை மூதூர் வைத்தியசாலையில் சேர்ப்பித்து உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டது.
இச்சம்பவம் நடைபெற்ற மறுவாரம் மூதூர் நீதிபதி சுவர்ணராஜா முன்னிலையில் அடையாள அணிவகுப்பொன்று நடத்தப்பட்டது. இதன்போது குறித்த தெஹிவத்தை இராணுவ முகாமைச் சேர்ந்த 9 படைவீரர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு மூதூர் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
ஆரம்பத்தில் மூதூர் நீதிமன்றில் விவசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட குமாரபுரம் கொலைவழக்கு பின்பு திருகோணமலை மேல்நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு எதிரிகளான இராணுவ வீரர்கள் திருகோணமலை பாதுகாப்பு பற்றி சந்தேகம் தெரிவித்ததன் பேரில் மேற்படி வழக்கு 2012 ஆம் ஆண்டு அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.
அனுராதபுர நீதிமன்றில் குமாரபுரத்தைச் சேர்ந்த சாட்சியங்கள் அழைக்கப்பட்டு 15 தடவைகளுக்கு மேல் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்த போதும் தீர்ப்பு வழங்கப்படாமல் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கிடப்பில் இருந்த குமாரபுரம் படுகொலை வழக்கு கடந்த ஜூன் மாதம் (2016) முதல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றினால் 20 சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் நான்கு பேர் இறந்துவிட்ட காரணத்தினால் 16 பேரே சாட்சியமளித்துள்ளனர்.
இதே போன்று படைத்தரப்பில் சந்தேகத்தின் பேரில் 8 இராணுவ வீரர்கள் பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டபோதும் 2 இராணுவ வீரர்கள் மரணித்ததன் காரணமாக ஆறு பேரே நீதிமன்றுக்கு ஆஜராகி வந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் காயம் சித்திரவதை, பாலியல் வன்மை, உயிர் இழப்புகள் போன்றவற்றுடன் தொடர்புடைய 120 உடன் சாட்சியம் வழங்கி எதிரிகளை அடையாளம் காட்டியுள்ளனர் என ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனுராதபுரம் மேல் நீதிமன்றில் விசாரணைகள் ஆனி, ஆடி மாதங்களில் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்று வந்த வேளையில் விசாரணையின் போது சாட்சியங்கள் அளித்த வாக்கு மூலங்கள் குமாரபுரம் படு கொலையின் கொடூரங்களைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைகிறது. அதில் இரண்டொன்றை வாசகர்களின் அவதானிப்புக்காகத் தருகின்றேன்.
சுடாதீர்கள் சுடாதீர்கள் எனக் கையெடுத்துக் கும்பிட்டோம்.
கத்தினோம் ஆனாலும் படையினர் கேட்கவில்லை. எனது தந்தையையும் (கிட்டிணன் கோவிந்தன்) கணவரும் (அருணாசலம் தங்கவேல்) (50) ஆயுதங்களுடன் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இராணுவ சீருடையில் வந்தவர்கள் சாராயம் குடித்திருந்தனர். தள்ளாடி தள்ளாடி வந்தார்கள். எனது கணவரை சுட்டவர் கழுத்தில் மாலையாக தோட்டாக்களைப் போட்டிருந்தார் (சாட்சி மருதாயி சாட்சியம் 29.06.2016).
சுமார் 4 மணியளவில் எமது கிராமப்பக்கம் வெடிச்சத்தம் கேட்டது. பயத்தின் காரணமாக வீட்டுக்குள் இருந்து விட்டேன் அப்போது அங்குவந்த இராணுவத்தினர் வீட்டுக் கதவைத் திறந்து சுடத் தொடங்கினர்.
எனது மாமியும் (கந்தப்பொடி கமலாதேவி 48) எனது தங்கை தங்கவேல் கலாதேவி (12) சுட்டுக் கொல்லப்பட்டனர். (சாட்சி தங்கவேல் கோமளேஸ்வரன் சாட்சியம் (04.07.2016).
நான் குமாரபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட போதும் திருமணம் முடித்து பள்ளிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்தேன். சம்பவ தினம் குமாரபுரத்துக்கு எனது தயார் வீட்டுக்கு வந்திருந்தேன்.
எனது சகோதரி பாக்கியவதியின் வீட்டுக்கு எனது பிள்ளைகளான சு.பிரபாகரன் (12), சு.சுபாஜினி (14) மற்றும் என் கணவர் சி.சுந்தரலிங்கம் சென்றிருந்தனர்.
சம்பவம் நடைபெற்ற மறுநாள் எனது சகோதரி வீட்டுக்கு காலை சென்ற போது எனது இரு பிள்ளைகளும் சகோதரியும் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். எனது கணவரும் காயப்பட்டிருந்தார். நான்கு வருடங்களின் பின் அவரும் இயற்கை மரணம் எய்திவிட்டார். (சாட்சி இதயராணி சுந்தரலிங்கம்)
இருபது வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற குமாரபுரம் படுகொலை விசாரணைகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றில் நீதிபதி மஞ்சுள திலகரட்ண தலைமையில் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரை (27.06.2016 – 27.07.2016) 7 ஜூரிமார் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையானது கடந்த 27.07.2016 அன்று முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 6 இராணுவ வீரர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.
தலைமை நீதிபதி மஞ்சுள திலகரட்ண ஆறு இராணுவத்தினரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
ஜூரிமாரின் ஏகமனதான முடிவுக்கு அமையவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் 20 வருடங்களின் பின் உறவினர்களால் பிரதிவாதிகள் அடையாளம் காணப்பட்டதை மட்டும் வைத்து அவர்களை குற்றவாளிகளாக அறிவிப்பது தர்மமாகாது என தலைமை நீதிபதி தீர்ப்பின் போது எடுத்துரைத்தார்.
திருகோணமலை தெஹிவத்த இராணுவ முகாமில் 1996 ஆம் ஆண்டு கடமையாற்றிய சுவி சிறிகெதர நிசாந்த, தென்தலு முதியன்சலாகே, சுஜித் சிசிர குமார, மாரசிங்கபேடிகே கபிலதர்ஷன, ஹேரத் முதியன்சலாகே அபேசிங்க, பவரம்பேடிகே உபசேன, ஹிட்டி பண்டாரலாகே அபேரத்ன ஹிட்டிபண்டார ஆகிய ஆறு முன்னாள் இராணுவ கோப்ரல்களே விடுதலை செய்யப்பட்டவர்களாகும்.
மூதூர் நீதிமன்றில் 1996 ஆம் ஆண்டு இக்கொலைகள் தொடர்பான சுருக்க முறையற்ற வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் சட்டமா அதிபரினால் 6 இராணுவ கோப்ரல்களுக்கும் எதிராக வடமத்திய மாகாண அனுராதபுர நீதிமன்றில் மாற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இடம் பெற்று வந்தன.
தனித்தனியாக ஒவ்வொரு பிரதிவாதிகளுக்கெதிராக 101 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை நீதிமன்ற வரலாற்றில் பிரபல்யம் கொண்ட வழக்கு எனப் பேசப்படுகிறது.
இவ்வழக்கில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்பு கொண்டவர்கள் என்ற வகையில் 108 பேருக்கு அழைப்பாணை சாட்சியங்களாக விடுக்கப்பட்டபோதும் 38பேர் விசாரிக்கப்பட்டார்கள் என்றும் இச்சம்பவத்துக்கு ஆதாரமாக தடயப்பொருட்களாக துப்பாக்கிகள், அதற்குரிய ஆவணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கை 24….,
சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை 25, இரசாயனப்பகுப்பாய்வு அறிக்கையென சட்டமா அதிபரினால் ஜூரி சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் சாட்சியாளர்களாக, பொலிஸ் அதிகாரிகள் விசேட வைத்திய நிபுணர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சாட்சியாளர்களான பொதுமக்கள் உள்ளிட்ட 107 பேர் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டிருந்தனர். சுமார் 1500 பக்கங்களில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டமை இவ்வழக்கில் விசேட அம்சமாகும்.
இவ்வழக்கின் தீர்ப்புத் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டுள்ளார்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை யாகும்.
-திருமலைநவம்-