கடல் வழி வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தொடங்கப்பட்ட துறைமுகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான போர், தற்காலத்தில் புதிய வடிவத்தை எடுத்திருக்கிறது.
உலகெங்கும் உள்ள முக்கியமான துறைமுகங்களை நேரடியாகவே தமது கடற்படைத் தளமாக மாற்றிக் கொள்வதில் இருந்து, அவற்றின் செயற்பாடுகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்துவது வரை- பல்வேறு உத்திகளில் இந்த விடயம் கையாளப்படுகிறது.
முன்னரைப் போன்று திடீரெனப் படையெடுத்துச் சென்று துறைமுகங்களைக் கைப்பற்றும் வழக்கம் தற்போது இல்லாவிடினும், நேரடியாகவே கடற்படைத் தளங்களை அமைத்துக் கட்டுப்படுத்தும் வழக்கம் குறைந்து கொண்டு வருகின்ற போதிலும், துறைமுகங்களின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்வது என்பது பிரதான நாடுகளின் தேவையாகவே இன்றும் இருந்து வருகிறது.
இதற்கென இப்போது நாடுகள் வர்த்தக ரீதியான உடன்பாடுகளைச் செய்து கொள்கின்றன. துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில், தமது செல்வாக்கைச் செலுத்த முனைகின்றன.
துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில், இலங்கையின் முக்கியமான துறைமுகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டிருக்கின்றன.
திருகோணமலைத் துறைமுகம், எப்போதுமே இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு உறுத்துகின்ற ஒன்றாகவே இருந்து வருகிறது.
அதுபோலவே, கொழும்பு, அம்பாந்தோட்டை, காலி துறைமுகங்களும் பல்வேறு நாடுகளினதும் கவனிப்புக்குரியவையாகவே இருந்து வருகின்றன. இந்தியாவுக்கு, தனக்கு மிக அருகில் உள்ள காங்கேசன்துறை துறைமுகம் மீது ஒரு குறி இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், அண்மையில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, இலங்கையை கப்பல் போக்குவரத்துக் கேந்திரமாக மாற்றுவதற்கு சீனா உதவத் தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் துறைமுகங்களின் அபிவிருத்தி மீது சீனாவுக்கு உள்ள ஈடுபாட்டை இது வெளிப்படுத்தியிருக்கிறது.
அதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதன் அயல் பகுதியை, சீனாவின் உதவியுடனும், காலியை அமெரிக்க உதவியுடனும், கொழும்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களை சிங்கப்பூரின் உதவியுடனும் அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
ஜா-எல வரை கொழும்புத் துறைமுகத்தை விரிவுபடுத்தி, தெற்காசியாவின் மிகப்பெரிய துறைமுகமாக மாற்றுவதே தமது திட்டம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே கொழும்புத் துறைமுகத்தில் ஒரு கொள்கலன் இறங்குதுறையை அபிவிருத்தி செய்து இயக்கி வருகிறது சீனா.
அதேவேளை, கொழும்புத் துறைமுகத்தின் கொள்கலன்களின் பாதுகாப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.
இதனை மேலும் விரிவாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. கொழும்புத் துறைமுகமானது, பொருட்களைக் கையாள்வதில், உலகின் 30ஆவது இடத்தில் இருக்கின்றது.
சிங்கப்பூர், டுபாய் ஆகிய பிரதான துறைமுகங்களுக்கு இடையில்- பிரதான கப்பல் போக்குவரத்து மார்க்கத்தில் கொழும்புத் துறைமுகம் இருப்பதுதான் இதற்கு அதிக பலத்தையும், சர்வதேச கவனத்தையும் கொடுத்திருக்கிறது.
கொழும்புத் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு, கிழக்கு மேற்கு கப்பல் பாதையில் ஆழம் மிகுந்த துறைமுகமாக இருப்பது மட்டும் காரணமல்ல.
அகண்டு பரந்த இந்தியாவின், சரக்குக் கப்பல்கள் கையாளும் 60 வீதமான கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகம் வழியாகவே பரிமாற்றம் செய்யப்படுவதும் அதற்கு முக்கியமான ஒரு காரணம்.
நீண்ட கடலோரப் பகுதியைக் கொண்ட இந்தியா, தனது நாட்டுக்குள் கொள்கலன்களை கப்பல் மூலம், அனுப்புவதற்குக் கூட கொழும்புத் துறைமுகத்தைத்தான் பயன்படுத்துகின்றது. கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் பலவீனமான ஒரு அம்சமாகவே இது பார்க்கப்படுகிறது.
கொழும்புத் துறைமுகத்தை சீனா தனது கைக்குள் போடுவதற்கான முயற்சிகளில் இறங்கிய பின்னர்தான், தனது கொள்கலன் போக்குவரத்து ஆபத்து ஒன்றை எதிர்கொண்டிருப்பதை இந்தியா உணரத் தொடங்கியது.
இதனால்தான் இப்போது, தமிழ்நாட்டின் கடைக் கோடியில், நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள குளைச்சலுக்கு அருகே, இனயம் என்ற இடத்தில், பாரிய துறைமுகம் ஒன்றை அமைக்கும் திட்டங்களை இந்தியா ஆரம்பித்திருக்கிறது.
28 ஆயிரம் கோடி ரூபா செலவில், மூன்று கட்டங்களாக இந்த பாரிய துறைமுகத்தை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக 500 ஏக்கர் நிலம் கடலில் இருந்து மீட்கப்படவுள்ளது.
குளச்சல் இந்தியாவின் முக்கியமானதொரு இயற்கைத் துறைமுகம். பல நூற்றாண்டுகளாகவே இதன் முக்கியத்துவம் வெளிநாட்டவர்களால் உணரப்பட்டிருந்தது. டச்சுப் படைகள் முதன் முதலாக அரபிக்கடல் வழியாக இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது இங்குதான்.
கொழும்புத் துறைமுகத்துக்கு மிக அருகாகவே அமையப் போகின்ற இனயம் துறைமுகம், சர்வதேச கடற்பாதையில் இருந்து வெறும் 4 கடல் மைல் துரத்தில்தான் இருக்கிறது.
இந்த துறைமுகத்தை அமைப்பதன் மூலம், இந்தியக் கப்பல்கள் உள்நாட்டுக்குள் கொள்கலன்களை மாற்றிக் கொள்ளும் வசதிகள் கிடைக்கும், அதனால் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாவை மிச்சப்படுத்தலாம் என்கிறது இந்தியா.
இனயம் துறைமுகத்திட்டத்தை, இந்தியா தனது பொருளாதார நலனை மாத்திரம் அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கவில்லை. அதற்கும் அப்பால், கொழும்புத் துறைமுகத்தின் மீது அதிகரித்து வரும் சர்வதேச கவனமும் தான் காரணம்.
கொழும்புத் துறைமுகமானது அமெரிக்கா, சீனா என்று பல்வேறு நாடுகளின் செல்வாக்கிற்குட்பட்ட பகுதியாக மாறிவரும் நிலையில், அதன் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு இந்தியா முனைகிறது.
கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தை இந்தியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க முயன்றதன் ஒரு நேரடி விளைவாகக் கூட, இந்த இனயம் துறைமுகத் திட்டத்தைக் குறிப்பிடலாம்.
கொழும்பு மாத்திரமன்றி, இலங்கையின் ஏனைய துறைமுகங்களின் மீது அதிகரித்து வரும் சர்வதேச கவனமும் தலையீடுகளும் இந்தியாவை கவலை கொள்ளவும் கரிசனை கொள்ளவும் வைத்திருக்கிறது.
அண்மையில் சிங்கப்பூரில் ஊடகம் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் இலங்கையில் சீனாவின் முதலீடுகள் குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கருத்து, சீனாவின் குரலைத்தான் பிரதிபலித்திருந்தது.
அதுமட்டுமன்றி, எந்தநாட்டுப் போர்க்கப்பல்களும் விநியோகத் தேவைக்காக இலங்கைத் துறைமுகத்துக்கு வந்து செல்லலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
சீன நீர்மூழ்கிகள் இரண்டு தடவைகள் கொழும்புத் துறைமுகம் வந்து சென்றமை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எற்படுத்திய விசனத்தை தெரிந்து கொண்டே அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
சீனாவின் துணையுடன், இலங்கையின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது என்பதையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தக் கருத்து உணர்த்தி நிற்கிறது.
இதனால்தான், கொழும்புத் துறைமுகத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியிருக்கிறது.
பொருளாதார நலன்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இது கொழும்பின் மீது நேரடித் தாக்கம் ஒன்றை செலுத்தப் போகும் விடயமாகவே இருக்கும் என்றே நம்பப்படுகிறது.
-சத்ரியன்