‘சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் ’ – இந்தத் தலைப்பைப் பார்த்த உடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? ‘ மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறாங்கப்பா’ என்றுதானே?
மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். எனது அனுபவத்தின் அடிப்படையில் உங்களுக்கு ஒரு சின்ன புள்ளிவிவரம் தந்தால் இரண்டுக்கும் இடையிலான நெருக்கமான உறவு புரிந்துவிடும்.
பாலுறவு சார்ந்த குறைபாடுகளுக்காக என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை , மிகக் கவனமாக ஆராய்ந்து பார்த்ததில் , ஓர் அதிர்ச்சிகரமான உண்மையைக் கண்டுபிடிக்க முடிந்தது.
ஆண்மைக் குறைவு என்ற பாலுறவுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் சர்க்கரை நோயாளிகளாக இருக்கிறார்கள்.
குறிப்பாக , பல்வேறு செக்ஸ் பிரச்னைகளோடு வரும் இளைஞர்களில் 30 முதல் 40 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது.
செக்ஸ் பிரச்னையும் இருக்கிறது. பாலியல் குறைபாடும் இருக்கிறது என்பதற்காக இரண்டையும் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியுமா என்று நீங்கள் கேட்கலாம்.
நியாயமான கேள்விதான்.
அந்த அடிப்படையில் இவை இரண்டையும் நான் தொடர்புபடுத்தவில்லை.
அதற்கு வேறு சில வலுவான காரணங்கள் இருக்கின்றன.
ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இல்லாமை , விந்தணுக்கள் குறைபாடு , விந்து முந்துதல் , செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல் போன்ற குறைபாடுகளையும், பெண்களுக்கு பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் யோனிச்சுரப்பு நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டு போதல், பிறப்புறுப்பில் நோய்த்தொற்று , ஹார்மோன்களில் குறைபாடு போன்ற பிரச்னைகளையும் உருவாக்குவதில் முக்கியமான வில்லனாகத் திகழ்வது சர்க்கரை நோய்தான்.
செக்ஸ் குறைபாடு என்று என்னிடம் வருகிறவர்களில் பல பேருக்கு மேலே சொன்ன அறிகுறிகள்தான் காணப்படுகின்றன.
அந்த அறிகுறிகளின் பின்னணியை ஆராய்ந்து பார்த்ததில் , அனைத்துக்கும் காரணமாக இருப்பது சர்க்கரை நோய்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தாதவர்களில் 50 சதவீதத்தினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைபாட்டுக்கு ஆளாவதும் ஆராய்ச்சியின் பலனாகத் தெரியவந்தது.
சர்க்கரைநோயின் பாதிப்புகள் இதோடு நின்றுவிடவில்லை.
இன்றைக்கு நடுத்தர வயதில் உள்ள ஆண்களும் பெண்களும்தான் அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். வயதாகி வருவதால் தங்களின் பாலியல் திறன் குறைந்து வருவதாக அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
அந்தக் கவலையை அதிகப்படுத்தும் விதமாக சர்க்கரை நோய் பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகிறது.
பெண்களைவிட ஆண்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு உடலியல் அமைப்பு ரீதியாக ஒரு காரணம் உண்டு.
பெண்களின் பாலுறுப்புகள் உடலின் உட்புறமாக அமைந்துள்ளன. அவர்களுக்குத் தோன்றும் கிளர்ச்சி நிலைகளும் , எழுச்சிகளும் வெளியே தெரிவதில்லை.
ஆனால் , ஆண்களுக்கு பாலுறுப்பு உடலின் வெளியே அமைந்துள்ளது. அந்த உறுப்பு விறைப்படைந்தால் மட்டுமே பாலுறவுகொள்ள இயலும். இல்லாவிட்டால் பாலுறவுகொள்ள முடியாது.
சர்க்கரை நோயின்யின் காரணமாக , ஆணுறுப்பில் விறைப்பை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சிதைக்கப்படுகின்றன.
பொதுவாகவே , புகை , போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல் , கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல் , அதிகமாக மன இறுக்கம் , வேலைச்சுமை , டென்ஷன் ஆகியவற்றின் காரணமாக ஆண்களின் பாலுறவுத் திறன் பாதிக்கப்படுகிறது.
அதோடு சர்க்கரை நோயின் பாதிப்பும் சேரும்போது சேதாரத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோய் சார்ந்த பாலுறவுக் குறைபாட்டுக்கு எளிதாக இரையாகும் இன்னொரு பிரிவினராக அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களைச் சொல்லலாம். பாலுறவுக் குறைபாடுதானே…இருந்துவிட்டுப் போகிறது அதைப்பற்றி இவ்வளவு அலட்டிக்கொள்வானேன் என்று இருந்துவிட முடியாது.
ஏனெனில் , பாலுறவுதான் சமூகத்தின் மிகப் பெரிய அந்தஸ்தாக , ஆளுமைத்தன்மையின் அடையாளமாக , ஆண்பெண் கூட்டு வாழ்க்கையின் ஆதார மாகக் கருதப்படுகிறது.
பாலுறவில் சோபிக்காதவர்கள் தாழ்வு மனப்பான்மையைத் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்கிறார்கள்.
அது மட்டுமன்றி அவர்களின் துணையாலும் நிராகரிக்கப்பட்டுவிடுகிறார்கள். செக்ஸ் விஷயத்தில் பலவீனமாக இருந்தால் அவரது எண்ண ஓட்டங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை.
காரணம் என்னவென்றால் , மனிதப் பாலுறவு என்பது ஆளுமை சார்ந்த விஷயம். திருமணமான பின்பு செக்ஸ் என்பது சமூகம் அங்கீகரித்த ஒரு விஷயம்.
ஆண்மைக்குறைவால் செக்ஸ் இன்பத்தை இழப்பது என்பது ஆளுமையை , அங்கீகாரத்தை இழக்கிற விஷயமாகக் கருதப்படுவதால்தான் எத்தகைய நோய் வந்தாலும் , ஆண் தன்னை செக்ஸ் ஆதிக்கம் உள்ளவனாக நினைத்துக் கொள்கிறான்.
ஆனால் , சர்க்கரை நோயின்போது மட்டும் இந்த நினைப்பு செல்லாக் காசாகிவிடுகிறது.
கட்டுப்படாத சர்க்கரை நோய், ஆணின் பாலுறவுக்கு அச்சாரமான ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையையும், பாலுறவுகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் முற்றிலும் போக்கிவிடுகிறது.
இதனால் , பெரிய அளவில் பாதிப்பும் , மன உளைச்சலும் ஏற்படுகிறது. இந்த இடத்தில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயாளிக்கு விறைப்புத்தன்மை வராத நிலை ஏற்பட்டால் அவருக்கு நோயின் பாதிப்பு அதிகரித்துவிட்டது என்று பொருள். அவருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் மிக அதிகம்.
இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 60 சதவீதத்தினருக்கு பின்னாளில் மாரடைப்பு வந்துள்ளது; 40 சதவீதம் பேர் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டுள்ளனர்.
எனவே , ஆண்மைக்குறைவு என்ற பிரச்னை வந்தாலே , இதய நோய்க்கான பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும்.
இதை அறியாமல் ஆண்மைக்குறைவுக்காக மட்டும் சிகிச்சை செய்துகொண்டு , திடீர் மாரடைப்பால் பலர் மரணத்தைத் தழுவிக்கொள்கிறார்கள்.
இந்த அத்தியாயத்தில் இதுவரை சொல்லப்பட்ட தகவல்களின் மூலமாக நான் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வந்த செய்தி இதுதான். சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டாலே பெரும்பாலான செக்ஸ் பிரச்னைகளைத் தவிர்த்துவிட முடியும்.
இந்த விவரம் தெரியாமல் பலர் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கிறார்கள். அவ்வளவு செலவழித்தும் பலன் இல்லாமல் போவதுதான் வருத்தமான விஷயம்.
இந்த நிலைக்கு ஆட்படாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் ? சர்க்கரை நோய் என்றால் என்ன ? அது எவ்வாறு வருகிறது ? அதற்குத் தீர்வு என்ன ? என சர்க்கரை வியாதி சார்ந்த பல விஷயங்களை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
சர்க்கரை நோய் எப்படியெல்லாம் பாலுறவு ரீதியான பிரச்னைகளை உருவாக்குகிறது ? அதில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்வது என்பதையும் விரிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.
இவை தொடர்பான தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் பார்போம்…
தொடரும்
டாக்டர் டி. காமராஜ் / Dr. T. Kamaraj