வவுனியா கொக்குவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்பு பிரதேசத்திற்குள் நேற்று மாலை 6.30 மணியளவில் சென்ற இளைஞர் குழுவொன்று அங்கிருந்த சிங்கள மக்களை வெளியேற கோரியதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
கொக்குவெளி பிரதேசத்தை சேர்ந்த சின்னவன் என அழைக்கப்படும் நபரும் அவருடைய சகாக்களும் இணைந்தே தம்மை வெளியேற கோரியதாக அப்பகுதி சிங்கள மக்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில் அச்சம் காரணமாக அப்பகுதியில் இருந்து சுமார் 30 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறி ஏ9 வீதியில் நின்று போக்குவரத்துக்கும் இடையூறை ஏற்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரமாக போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக பதற்றமான நிலை ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வவுனியா பொலிஸார் குவிக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்வதாக கொடுத்த வாக்குறுதியை அடுத்து அப்பகுதி மக்களை அவர்களின் வீடுகளில் கொண்டு சென்று விட்டிருந்ததுடன் அப்பகுதியில் பொலிஸார் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இக் கிராமத்திற்கு அருகாமையில் தமிழ் மக்கள் வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.