சென்னை: அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, கவர்னரின் முதன்மை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக தமிழக கவர்னர் வித்யாசாகர் அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மாலை 6.45 மணிக்கு சென்றார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை சேர்மன் டாக்டர் பிரதாப் ரெட்டி கவர்னருக்கு விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். உடன் வந்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் தற்போதைய உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் விரிவாக விளக்கினார்கள்.
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார். அவர் விரைவில் பூரண குணம் அடைவார் என்பதை எண்ணி கவர்னர் மகிழ்ச்சியடைந்தார். மேலும், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி பழக் கூடையை அவர்களிடம் கொடுத்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22 ம் தேதி இரவு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தினமும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அந்த அறிக்கைகளின்படி, அவர் உடல் நலம் நல்ல நிலையில் இருப்பதாகவும் அதேசமயம் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் 9 நாட்களுக்கும் மேலாக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் முதல்வரின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க ஜெயலலிதா சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியிட வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டார்.
முதல்வர் நலமுடன் இருப்பதாக கவர்னர் அளித்துள்ள அதிகாரப்பூர்வ தகவலையடுத்து அவர் உடல்நிலை தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா துணை சபாநாயகர் தம்பி துரை, நிதியமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எடப்படாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் ராமமோகன ராவ், முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த கவர்னர் வித்யாசாகரை வரவேற்றனர்.
கவர்னர் வருகையையொட்டி மருத்துவமனையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.