முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் இருவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் இரண்டு பொலிஸ் மா அதிபர்களும் ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.
கொலை தொடர்பிலான தகவல்களை மூடிமறைத்தல், விசாரணைகளை கிடப்பில் போடுதல், சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.
இந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் இருவரிடமும் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமும் சில சந்தர்ப்பங்களில் ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
லசந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நபர்கள் பற்றிய இரகசிய விபரங்களை குறித்து வைத்திருந்த குறிப்புப் புத்தகம் காணாமல் போனமை தொடாபில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லசந்த கொலை தொடர்பில் விசாரணை நடத்தி வந்த புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து விசாரணைகளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தமை குறித்து மற்றுமொரு பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரிகள் வேண்டுமென்றே லசந்த கொலை தொடர்பிலான விசாரணைகளை மூடி மறைத்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த அதிகாரிகளுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.