சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமையில் கடந்த 14 நாட்களாக பதப்படுத்தபட்டு வைக்கபட்டிருந்த ராம்குமார் உடலுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் கதிர்கே குப்தா முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.
உடல்கூறு பரிசோதனை முழுவதும் வீடியோ படம் எடுக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலை ராம்குமார் தந்தை பரமசிவத்திடம், திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் தமிழ்செல்வி மற்றும் மருத்துவக்குழு முன்னிலையில் சீல் வைக்கபட்ட ராம்குமாரில் உடல் பிரித்து காண்பிக்கபட்டது.
அப்போது ராம்குமாரின் உடலில் சில சந்தேகப் படும்படியான காயங்கள் இருப்பதாக கூறியதை நடுவரிடம் கூறியுள்ளார்.
அதை நடுவர் தமிழ்செல்வி வாக்குமூலமாக எடுத்துக்கொண்டதாக செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமாரின் தந்தை தெரிவித்தார்.
பின்னர் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், பிரேதக்கூறுகள் ஐதராபாத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பட்டு அதன் விவரங்கள் மறுபரிசோதனைச் செய்யப்பட வேண்டும் என்றார்.
இன்று நடைபெற்ற பிரேத பரிசோதனையின் நகல்களும் வீடியோ காட்சிகளும் இன்று கிடைக்கும் என்று நம்புவதாக அப்போது அவர் கூறினார்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை தங்களுக்கு திருப்திகரமாக இல்லாதபட்சத்தில் மறு உடல்கூறு ஆய்வுக்கு வலியுறுத்துவோம் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இதனிடையே, ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்பட்டது.