முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 11 நாட்களாகிறது. இதுவரை ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தெளிவான தகவல் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று அதிமுகவினர் குமுறுகின்றனர்.
அமைச்சர்களுக்கு மட்டும் அப்பல்லோவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார்கள் அதிமுகவினர். ஏன் இந்த பாரபட்சம் என்றும் அவர்கள் புலம்புகிறார்கள்.
கடந்த 11 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையையே சுற்றிச் சுற்றி வந்தவண்ணம் உள்ளனர் அதிமுகவினர்.
ஆனால் முதல்வர் குறித்து தெளிவான தகவல் இதுவரை வரவில்லை என்பது அவர்களை பெரிதும் வருத்தமடைய வைத்துள்ளது.
22ம் தேதி அட்மிஷன்
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அனுமதிக்க்பட்ட பின்னர் அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைவு என்று கூறப்பட்டது.
தொடர் வதந்திகள்
ஆனால் முதல்வர் குறித்து தொடர்ந்து அடுத்தடுத்து வதந்திகளே அதிகம் பரவுகின்றன. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அப்பல்லோ சார்பில் அவ்வவப்போது சுருக்கமான அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது.
ஆனால் அரசுத் தரப்பிலோ அல்லது அதிமுக தரப்பிலோ எந்தத் தெளிவான தகவலும் இல்லை.
அதிமுகவினர்
குமுறல் இதனால் அதிமுகவினர் பெரும் வேதனையுடன் உள்ளனர்.
மருத்துவமனை முன்பு அவர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர். அமைச்சர்கள் வருகிறார்கள். அதிகாரிகள் வருகிறார்கள். ஆனால் தொண்டர்களை தூரத்திலேயே நிறுத்தி விடுகின்றனர் போலீஸார்.
என்னதான் நடக்கிறது
இதுகுறித்து அதிமுக தொண்டர்கள் கூறுகையில் அம்மா அட்மிட் ஆன நாளிலிருந்து வருகிறோம். அம்மா எப்படி இருக்கிறார் என்று யாருமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள். அவர் குறித்து நாங்கள் பெரும் கவலையுடன் உள்ளோம்.
குரலைக் கேட்க வேண்டும் அம்மாவின் உடல் நிலை குறித்துக் கூறாவிட்டாலும் கூட பரவாயில்லை.
அவர் நலமாக இருக்கிறார் என்பதை அறிய அவரது குரலைப் பதிவு செய்து கூட வெளியிட்டால் போதும். நிம்மதியாக இருப்போம் என்று தொண்டர்கள் கூறுகின்றனர். அமைச்சர்களை விட அதிமுக நிர்வாகிகளை விட இந்த அதிமுக தொண்டர்கள்தான் மிகப் பெரிய கவலையுடன், வருத்தத்துடன் காணப்பகின்றனர்.