டிசம்பர் 24, 1987. வியாழக்கிழமை. அதிகாலை 5.30 மணி. ராமாவரம் தோட்டம். புழுதியைக் கிளப்பிக்கொண்டு காம்பவுண்டு வாசல் முன் வந்து நின்றது ஒரு வெள்ளை நிற கார்.
வாசல் கதவைத் திறக்கச் சொல்லி ஹாரன் அடித்தும் பிரயோஜனமில்லை.
டிரைவர் இறங்கிச்சென்று வாசல் கதவைத் தட்டிப் பார்த்தார். பதிலில்லை.
சட்டென்று கார் கதவைத் திறந்துகொண்டு கோபத்தோடு அந்தப்பெண் இறங்கினார். ஜெயலலிதா!
அழுது சிவந்த கண்கள். கோபம் முகத்தை இன்னும் கொஞ்சம் சிவக்க வைத்திருந்தது.
‘ தலைவர் வீட்டுக்குள்ளே நான் வரத் தடை போட்டது யாரு ?’ கேள்விக்குப் பதிலில்லை. நிசப்தம்.
சில நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு , அந்தப் பெரிய வாசல் கதவு திறந்தது.
கிடுகிடுவென்று ஹாலுக்குள் நுழைந்து , லிஃப்ட்டை புறக்கணித்து , படிகளில் இரண்டு இரண்டாகத் தாவி , மூன்றாவது மாடிக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எம்.ஜி.ஆரின் அறைக் கதவு மூடப்பட்டிருந்தது. கதவைத் தட்டித் திறக்கச் சொன்னார்.
முட்டி மோதினார், கடைசியாக , கெஞ்சியும் பார்த்தார். கதவு திறக்கப்படவே இல்லை.
சுற்றியிருந்த சொந்தங்கள் , ஜெயலலிதாவைப் பார்த்து ஏதேதோ சொன்னார்கள்.
இரண்டு தரப்பிலும் வார்த்தைகள் பறந்தன.
ஜெயலலிதாவுக்குக் கோபம் கோபமாக வந்தது. வெளியே காத்திருந்த கட்சிக்காரர்கள் எட்டிப் பார்த்தார்கள்.
பின்புறக் கதவு வழியாக எம்.ஜி.ஆர். உடலை ஆம்புலன்ஸில் அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்த ஜெயலலிதா, திரும்பவும் விறுவிறுவென்று அதே படிகளின் வழியாகக் கீழிறிங்கி வாசலுக்குப் போய் எம்.ஜி.ஆருக்காகக் காத்திருந்தார்.
காலை 6.00 மணி.
வெள்ளை நிற ஆம்புலன்ஸை உரசியபடி அதைப் பின் தொடரத் தயாராக ஜெயலலிதாவின் கார் நின்றுகொண்டிருந்தது.
லிஃப்ட்டை உடைத்து , எம்.ஜி.ஆரின் உடலை நின்ற நிலையிலேயே தூக்கிக்கொண்டு வந்து ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.
கதவு சாத்தப்பட்டது.
எம்.ஜி.ஆரின் உடலைப் பார்க்க ஓடி வந்த கூட்டம் , ஜெயலலிதாவை அருகே நெருங்க விடாமல் செய்தது.
ஜெயலலிதா தன்னுடைய காரில் ஏறி உட்காருவதற்கும் ஆம்புலன்ஸ் புறப்பட்டு வேகமெடுக்கவும் சரியாக இருந்தது.
ஏமாற்றத்தாலும் கோபத்தாலும் இறுகிப் போன ஜெயலலிதாவை ஏற்றிக்கொண்டு , கார் போயஸ் தோட்டத்துக்குப் பறந்தது.
காலை 6.30 மணி. நேரு ஸ்டேடியம்.
சரசரவென்று நாலு ஜீப்கள் நேரு ஸ்டேடியத்துக்குள் நுழைந்தன.
மாலை நடைபெறவிருந்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் திறப்பு விழாவுக்காகத் தடுப்புகள் கட்டும் ஏற்பாடுகள் ஜரூராக நடந்துகொண்டிருந்தன.
ஜீப்பிலிருந்த இறங்கிய அந்த மூத்த போலீஸ் அதிகாரி சொன்னார் ’. எல்லோரும் வேலையை அப்படியே போட்டுட்டு முதல்ல ராஜாஜி பவனுக்குக் கிளம்புங்க! ’
‘ ஏன் ஸார் ? ஃபங்ஷனை ராஜாஜி பவனுக்கு மாத்திட்டாங்களா ?’
இல்லே. சி.எம். இறந்துட்டார்!
’ காலை 7.00 மணி.
ராஜாஜி பவன். ராஜாஜி பவனை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சூழ்ந்திருந்தனர்.
ஆண் , பெண் வித்தியாசம் இல்லாமல் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்த மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
மக்கள் வந்த வேகத்தில் வாசலில் இருந்த அந்த இரும்புக்கதவு சரிந்தது.
சவுக்காலான தடுப்புகளை அமைக்க வைத்திருந்த ஆணிகளை மிதித்து ஓடிவந்ததால் , பலருக்கும் காலில் ரத்தம்.
பல்லவன் போக்குவரத்துக் கழக ஆபீஸில் ஆரம்பித்து சேப்பாக்கம் ஸ்டேடியம் வரை ராஜாஜி பவனைச் சுற்றிலும் போலீஸ்காரர்கள் மூன்றடிக்கு ஒருவர் என நின்று கொண்டு இருந்தனர்.
காலை 7.25 மணி.
‘ சென்னையில் இன்று அதிகாலை காலமான தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி ’ சரோஜ் நாராயண்சுவாமி தலைப்புச் செய்தியை மீண்டும் வாசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் மண்டபத்தின் பின் வாசலில் ஒரே சலசலப்பு.
கறுப்புநிற உடையில் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் முன்னால் நடந்து வந்து கொண்டிருந்தார் ஜெயலலிதா.
அவருக்கு சில அடிகள் இடைவெளியில் ஆர்.எம். வீரப்பன் , பண்ருட்டி ராமச்சந்திரன் என எம்.ஜி.ஆரின் அமைச்சரவை சகாக்கள் நடந்து வந்தனர்.
மண்டபத்தின் நடுவிலிருந்த அந்தப் பெரிய மேஜை மீது ஒரு ஸ்டிரெச்சரில் எம்.ஜி.ஆர். உடல் கிடத்தப்பட்டிருந்தது. வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு பட்டுத்துணி கட்டியிருந்தார்கள்.
மூக்கு துவாரங்களில் பஞ்சு வைத்திருந்தார்கள்.
வலது கையில் இருந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி வித்தியாசம் இல்லாமல் கட்சிக்காரர்கள் வாசலில் காத்திருந்தார்கள்.
உள்ளே நுழைந்த ஜெயலலிதா , எம்.ஜி.ஆரை உற்றுப் பார்த்தார். கண்களில் நீர்த்திவலைகள்.
வாய்விட்டு அழாமல் இறுக்கமாக நகர்ந்து எம்.ஜி.ஆரின் தலைமாட்டுக்கு வந்தவர் , ஸ்டிரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுக்கமாகப் பற்றியபடியே அங்கேயே நின்றுகொண்டார்.
தொடரும்…
– ஜெ. ராம்கி