தூத்துக்கடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. கோவில்பட்டியிலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்த அவரை துப்பாக்கியால் பொசுக் என்று சுட்டுவிட்டு ஓடிவிட்டனர் அவருடன் வந்தவர்கள்.
கோவில்பட்டியிலிருந்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பதற்றத்தோடு நிறுத்தப்பட்டது.
உடன் பயணித்த பயணிகள் சிலர் ஓட்டம் பிடிக்க தொடங்கினர். அப்போது தான் இளைஞர் கருப்பசாமி சுட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
சுட்டு கொல்லப்பட்டவர் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச்சேர்ந்த கருப்புசாமி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து கிளம்பிய இந்த அரசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்து கோவில்பட்டி பேருந்துநிலையத்தில் நின்றவுடன் 3 இளைஞர்கள் அதில் ஏறியுள்ளனர். அந்த மூன்று பேரும். நெருங்கிய நண்பர்கள் போல நடந்து கொண்டனர்.
பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்த பிறகும் 3 பேரும் சகஜமாக பேசிக்கொண்டு வந்திருக்கின்றனர்.
ஆனால், பேருந்து கிளம்பிய 15 நிமிடத்திற்குள் அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காலை 11.15 மணிக்கு பேருந்து சாத்தூர் வந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.
அப்போது அந்த மூவரில் தடித்த உருவம் கொண்ட ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதும், இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ரத்தம் பீறிட்டு சரிந்தார்.
இதைக்கண்டதும் பயணிகள் அலறியடித்து பேருந்தில் இருந்து குதித்து ஓடினர். துப்பாக்கியால் சுட்ட நபரும், அவருடன் இருந்த நபரும் தப்பியோடிவிட்டனர்.
முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் மேற்கொண்டு விசாரணையை துவங்கியுள்ளனர்.
நண்பர்கள் போன்று பேசி கொண்டு வந்த இளைஞர்களில் ஒருவர் துப்பாக்கியால் ஒரு நொடிக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கோவில்பட்டி சாத்தூர் ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட கருப்பசாமியின் சகோதரர்கள் மந்திரமூர்த்தி மற்றும் கனகராஜ் ஆகியோர் தற்போது ஒரு கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளனர்.
அவர்கள் சகோதரர்கள் சம்மந்தப்பட்ட கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே கருப்பசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
கருப்பசாமி கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கருப்பசாமி கொலை தொடர்பாக அந்த பேருந்தில் பயணித்த அவரது நண்பர் ரமேஷ் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.