70 ஆண்டுகள் தாய்லாந்து மன்னராக நீடித்தவர் என்ற பெருமை பெற்ற பூமிபோல் அதுல்யாதேஜ் இன்று காலமானார் என அரண்மனை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் 234 ஆண்டுகள் மன்னராட்சியில் 9-வது மன்னராக நீடித்தவர். உலகிலேயே அதிக நாட்கள் மன்னராக பதவியில் நீடித்தவர் என்ற பெருமைக்குரியவர் பூமிபோல்.
இவர் கடந்த சில தினங்களாகவே சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் பாங்காக்கில் உள்ள சிரிராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
ஆனால் பூமிபோல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அரண்மனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டில் 20 முறை ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. இதில், 12 வெற்றிகரமாக முடிந்தது. ஆனாலும், நாட்டின் பாதுகாவலன் போல், மக்களுக்கு மிகவும் பிடித்தவராக பார்க்கப்பட்டவர், மதிக்கப்பட்டவர் பூமிபோல்.
இவருடைய ஆட்சிக் காலத்தில்தான், தாய்லாந்து நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை பெற்றது. அரிசி என்பது இவர்களது கனவாகவே இருந்தது.
இன்று உலகிலேயே அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் தாய்லாந்தும் முன்னணியில் உள்ளது. தாய்லாந்தில், மன்னர் பூமிபோலை எதிர்த்து யாராவது பேசினால் அவர்கள் சிறையில் கம்பி எண்ண வேண்டியது இருக்கும். அந்தளவிற்கு மன்னர் மீது அன்பு கொண்டு இருந்தனர்.
இவரின் இறப்பை தாங்க முடியாத பொதுமக்கள் தங்களுடைய சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் இவரின் புகைப்படத்தை Profile-ஆக வைத்து Love You King என மாற்றியுள்ளனர்.
மேலும் இவரது மறைவுக்குப் பின்னர் அந்த நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அரசர் பூமிபால், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் பிறந்தவர் , ஜூன் 9 1946-ல் அரியணையில் அமர்ந்துள்ளார்.
இவர் இன்று இறந்ததைத் தொடர்ந்து தாய்லாந்தின் புதிய மன்னராக மகா வஜ்ஜிரலாங்கோன் அறிவிக்கப்பட்டுள்ளார்.