ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து ஆச்சரயமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
புலனாய்வுப் பிரிவினர், நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மற்றும் லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு ஆகியன அரசியல் நோக்கில் செயற்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எவ்வாறெனினும் காலம் தாழ்த்தியேனும் இந்த விடயத்தை ஜனாதிபதி புரிந்து கொண்டமை முக்கியமானது.
இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகள் குறித்து மக்கள் நன்றாக தெளிவடைந்துள்ளனர்.
எனினும் நாட்டை ஆட்சி செய்யும் தரப்பினருக்கு இது பற்றி போதியளவு விளக்கம் கிடையாது. மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்த போது அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் பற்றி கூறியிருந்தனர்.
அதேபோன்று நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து கூறியுள்ளனர்.
எனினும் நாட்டை ஆட்சி செய்யும் தரப்பினர் இது பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.