தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து இரண்டு பெண் சிறப்பு மருத்துவர்கள் அப்பல்லோ வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 22 ஆம் திகதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு தொடர்ந்து சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் மருத்துவர்கள் ரிச்சர்டு பீலே தலைமையிலான மருத்துவ குழுவும், டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர்கள் அளித்து வரும் சிகிச்சையின் பலனாக ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் ஜெயலலிதா அவர்களுக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் மருவத்துவ மனையில் உள்ள இரண்டு பெண் மருத்துவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இன்று பிற்பகல் அப்பல்லோ வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பற்றி அறிந்து அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை வழங்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிருமி தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அவர் சிகிச்சை பெறும் வார்டில் பார்வையாளர்கள் யாரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஆறு நாட்களாக ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து எந்த அறிவிப்பும் அப்பல்லோ வெளியிடாத நிலையில் இன்று சிங்கபூர் மருத்துவர்கள் வந்த பின்னர் அறிக்கையை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
தொடர்ந்து சிகிச்சை அளிக்க உள்ள அவர்கள் முதல்வரின் உடல் நிலை குறித்து அறிந்த பின்னர் அவருக்கு தொடர்ந்து இங்கேயே சிகிச்சை அளிக்கலாமா அல்லது சிங்கப்பூர் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கலாமா என்று முடிவு செய்வார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.