கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் வைத்து வெள்ளைவேனில் வந்தோரால் 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள ஐந்து மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடற்படை புலனாய்வு பிரிவின் சிப்பாயான அளுத் கெதர உபுல் பண்டார நேற்று நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள ஐந்து மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் கிஹன் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சாட்சியமளித்த மேற்படி கடற்படை உத்தியோகத்தர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
குறித்த ஐந்து மாணவர்களும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் என்ற பெயரில் கடத்தி வரப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கு தான் உணவு வழங்கியதாகவும் அவர்களுடன் உரையாடியதாகவும், அதன் போது தனது புலனாய்வு அறிவின் ஊடாக அவர்களுக்கு புலிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொன்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடத்தப்பட்ட ஐவரில் கொட்டாஞ்ச்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன் மற்றும் திலகேஸ்வரன் ராமலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக இந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான கே.வி. தவராசா, ஜே.சி. வெலியமுன மற்றும் அச்சலா செனவிரத்ன ஆகியோர் ஆஜராகிவந்த நிலையில் நேற்று ஜெ.சி. வெலியமுன மற்றும் அச்சலா செனவிரத்ன ஆகியோர் ஆஜராகினர்.
சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட சட்டவாதி துசித் முதலிகே ஆஜராகியிருந்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் சிறப்பு விசாரணை அதிகாரியான நிஸாந்த டி சில்வாவும் ஆஜராகியிருந்தார்.
இந் நிலையில் நீதிமன்றின் அறிவித்தல் பிரகாரம் நேற்று கடற்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களான அலுத் கெதர உபுல் பண்டார மற்றும் பந்து குமார ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தர்.
இந்த நிலையில் சாட்சியமளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சி. வெலியமுனவின் நெறிப்படுத்தலில் சாட்சிப் பதிவு இடம்பெற்றது.
சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சி. வெலியமுனவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு சாட்சியாளரான அலுத் கெதர உபுல் பண்டார பின்வருமாறு நீதிமன்றுக்கு சாட்சியமளித்தார்.
2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நான் கடற்படையின் தளபதி வசந்த கரன்னாகொடவின் பாதுகாப்பு தொடர்பிலான குழுவில் லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்கவின் கீழ் செயற்பட்டேன்.
என்னுடன் இருந்த மேலும் சிலருடன் சேர்ந்து நான் கடற்படை தளபதி கரன்னாகொடவின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள், அவர் செல்லம் இடங்கள் உள்ளிட்டவை தொடர்பில் பாதுகாப்பு விடயங்களை ஆராய்வேன். அவர் அதிகமாக கொச்சிகடை தேவாலயம் மற்றும் தெஹிவளைப் பகுதிக்கு அடிக்கடிச் செல்வார்.
இந்த நிலையில் 2008.9.17 அன்று தெஹிவளையில் வைத்து ஹெட்டி ஆராச்சி உள்ளிட்டவர்களினால் ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் டிலான் மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
நாம் கேட்ட போது அவர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறினர். அவர்கள் கடற்படை தலைமையகத்தின் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் மேற்பார்வையில் இருந்த பிட்டு பம்பு எனும் இடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
பிட்டு பம்பு முகாம் 2 ஆம் மாடியில் லெப்டினன் கொமண்டர் ஹெட்டி ஆராச்சி முதியன்சலாகே பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சியின் கீழ் இருந்தது. அங்கு லெப்டினன் கொமண்டர் சம்பத் முனசிங்கவும் அவரது குழுவும் கூட இருந்தது.
இதன்போது அவர்களுக்கு நான் உணவு கொடுத்தேன். அவர்களுடன் நான் உரையாடினேன். அவர்கள் அனைவரும் நன்றாக சிங்களத்தில் கதைத்தனர்.
அவர்கள் அனைவரும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள். எனது புலனாய்வு அறிவின் படி அவர்களுக்கு எவ்வித தொடர்பும் புலிகளுடன் இருக்கவில்லை என்பது தெளிவானது.
அவர்கள் மறு நாள் ஹெட்டி ஆராச்சி ஊடாக திருகோணமலைக்கு வேன் ஒன்றில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் மென்டிஸ் எனும் கடற்படை சிப்பாயும் அம்பாறை காமினி எனும் நபரும் சென்றனர்.
இது தொடர்பில் கடந்த 2009 ஜூன் மாதம் குற்றப் புலனயவுப் பிரிவு என்னையும் மற்றொரு கடற்படை அதிகாரியையும் விசாரித்தது.
இதன் போது நாம் அவர்களிடம் பொய்யான சாட்சியத்தையே வழங்கினோம்.
அப்போது கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த ஆந்த குருகே எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான வாக்கு மூலத்தை வழங்குமாறு நிர்பந்தித்தார்.
அதன்படியே நாம் அவ்வாறு வழங்கினோம். எனினும் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நிசாந்த எனது தொலைபேசி இலக்கத்தை ஒரு வாறு தேடி, எனது வாக்கு மூலத்தில் பரஸ்பரங்கள் காணப்படுவதாக கூறி மீள விசாரணைக்கு அழைத்தார்.
இதன் போது நான் அனைத்தையும் அவரிடம் வாக்கு மூலமாக வழக்கியுள்ளேன்.
திருகோணமலையிலும் மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்ட இடம் உள்ளிட்டவற்றை நான் புலனாய்வுப் பிரிவுக்கு அடையாளம் காட்டினேன். அது தொடர்பிலான விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கினேன் என்றார்.
இதனையடுத்து அரச சட்டவாதிக்கு சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்த அவகாசம் வழங்கப்பட்டது.
எனினும் இதன் போது குறுக்கு விசாரணைக்கு அரச சட்டவாதி கால அவகாசம் கோரவே வழக்கானது எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அன்றைய தினம் சாட்சியாளர்களை மன்றில் மீள ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.