யாழ். கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை யாழ். பல்கலை மாணவர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (24) ஆகிய மாணவர்கள் இன்று காலை உயிரிழந்திருந்தனர்.
இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மதிலொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆர்ம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் மோட்டர் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவனின் கையின் ஊடாக துப்பாக்கி குண்டு துளைத்து கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலையேற்பட்டிருந்தது.
கொலை குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை குறித்த மாணவர்களின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியில் கொண்டு செல்ல தாம் அனுமதிக்கபோவதில்லையென மாணவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், உண்மைகள் வெகுவிரைவில் வெளிக்கொணரப்படும் எனவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பொலிஸார்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரில், ஒருவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட விபத்தால் மற்றைய மாணவனும் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) என்ற மாணவனின் நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு இரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் உடல்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்தனர்.
விபத்து நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.
இதனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் போது, பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலை வளாகத்தை ஆக்கிரமித்தனர்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் மாணவன் ஒருவனின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் அதனை சட்ட வைத்தியதிகாரி வெளிப்படுத்தவில்லை.
யாழ்.பல்கலை மாணவர்கள் மரணம் ; கைது பின்னணியில் ஜனாதிபதி
21-10-2016
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்குமான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது பக்கச்சார்பற்ற விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டுமென எதிர்கட்சித்தலைவர் ஜனாதிபதியிடத்தில் வலியுறுத்தியதையடுத்து விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணம் விரைந்துள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இச்சந்திப்புத் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலையில் இடம்பெற்ற விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரடியாக சந்தித்த எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், இச்சம்பவம் தொடர்பாக எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தோடு தொடர்புடைய பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு இரா.சம்பந்தன் பொலிஸ் மா அதிபரைக் கோரியதோடு தனது கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமது பிள்ளைகளை இழந்து துயரில் வாடும் குடும்பத்தாருக்கும் உற்றார் மற்றும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.