பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியை சரத்பொன்சேகாவே எனக்கு தெரிவித்தார். நான் அந்த செய்தியால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
எனது பணியை நிறைவேற்றிய உணர்வு எனக்கு ஏற்பட்டது. யுத்தத்தை முடித்துவிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஓரு மனிதனை கொன்ற மகிழ்ச்சியல்ல அது, பயங்கரவாதத்தை முடிவிற்கு கொண்டுவந்த மகிழ்ச்சியது- இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
லங்காதீபவிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கேள்வி- தற்போதைய அரசாங்கம் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவது என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே ஆட்சிக்கு வந்தது?ஆகவே அதன் நடவடிக்கைகள் எவ்வாறு தவறு என கூறமுடியும்?
பதில்-நாங்கள் விசாரணைகளை எதிர்க்கவில்லை, ஆனால் இங்கு விடயம் என்னவென்றால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அழைப்பாணை அனுப்பி விசாரணைகளை மேற்கொள்கின்றனர், முப்படைகளின் தளபதிகளை கூட விசாரணைகளிற்கு அழைக்கின்றனர்.இதன் மூலம் எந்த வகையிலும் நீதி நிலைநாட்டப்படப்போவதில்லை என்பதே எனது கருத்து.
கேள்வி- யுத்தத்தின் இறுதி தருணங்களில் தென்பகுதியில் பல முறைகேடுகள் இடம்பெற்றன,வெள்ளை வான்களின் நடமாட்டம் காணப்பட்டது நீங்கள் எப்படி இதனை மறுக்க முடியும்?
பதில்- யுத்தத்தை வெற்றிகொண்ட வீரர்களிற்கு எதிராக முன்வைக்கப்பட்டவையே இந்த குற்றச்சாட்டுகள்.
உதாரணத்திற்கு பிரகீத் எக்னலிகொட விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அக்காலப்பகுதியில் மக்கள் அவ்வாறான ஓரு நபரின் பெயரையே அறிந்திருக்கவில்லை, என்றாலும் நாங்கள் விசாரணைகளை ஆரம்பித்தோம்.
தற்போது ஓரு வருட காலத்திற்கு மேலாக அவர்கள் புலனாய்வு அதிகாரிகளை சிறையில் அடைத்துவைத்துள்ளனர், இக்காலப்பகுதியில் ஏன் அவர்களால் விசாரணைகளை பூர்த்திசெய்யமுடியவில்லை. அவர்களால் பிரகீத் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கின்றாரா என்பதை கூட உறுதிசெய்யமுடியவில்லை.
ஆனால் அவர்கள் அப்பாவிகளை குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் தொடர்ந்தும் தடுத்துவைக்கின்றனர்.
இந்த அதிகாரிகள் மிகநீண்ட காலமாக பணியில் உள்ளவர்கள். ராஜபக்ச அரசாங்கத்தில் மாத்திரம் அவர்கள் பணியில் இருக்கவில்லை, நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை அகற்றுவதில்அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர், தென்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை கண்டுபிடிப்பதற்கு முக்கிய பங்காற்றியவர்கள், என்னை பொறுத்தவரை அவர்கள் குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை.
கேள்வி- நீங்கள் அரசியலிற்கு வருவது குறித்து தெரிவிக்கப்படுவதில் உண்மையுள்ளதா?
பதில்-நான் இன்னமும் தீர்க்ககரமான முடிவுகளை எடுக்கவில்லை,மகிந்தராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அவர்கள் அவரிற்கு பின்னர் நான் என சிந்திக்கிறார்களோ தெரியாது. எனினும் அவ்வாறான தீர்மானத்தை எடுப்பதற்கு இன்னமும் மூன்றரை வருடங்கள்உள்ளன.
கேள்வி- மக்கள் மத்தியில் 2020 ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து நிலவுகின்றது?
பதில்-எனக்கு என்னுடைய குடும்பத்திலிருந்து சுவீகரித்த அரசியல் அனுபவம் பின்னணி உள்ளது, எங்கள் நாட்டின் பல அரசியல்வாதிகள் அவ்வாறான பின்னணியை கொண்டவர்கள்,எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூன்று தலைமுறையாக அரசியலில் உள்ளனர், இந்த விடயத்தில் நான் அதிகம் தகுதிபெற்றவன், எங்கள் குடும்பத்துடன் எவரும் தங்களை ஓப்பிட முடியாது.
எனது குடும்பத்தை சேர்ந்த ஓன்பது பேர் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்துள்ளனர். என்னிடம் வழங்கப்பட்ட அனைத்துப்பொறுப்புகளையும் நான் மிகவும் சிறப்பாக முடித்துள்ளேன், என்னால் ஜனாதிபதிக்கான பணியை மிகச்சிறப்பாக செய்துமுடிக்க முடியும் என நான் கருதுகிறேன்.
கேள்வி- அவ்வாறான நிலையில் மகிந்த ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்திற்கு என்ன நடக்கும்?
பதில்- இது குறித்து நான் உறுதியற்றநிலையில் உள்ளேன். இன்றும் அவரே மக்கள் ஆதரவு அதிகமாக உள்ள ஜனாதிபதி பெருமளவானவர்களின் கவனம் அவரின் மீதே உள்ளது.
எதிர்கால அரசியல்சக்திகளால் அவரை தவிர்த்துச்செல்ல முடியாது. அவரிற்கு எதிராக வாக்களித்தவர்கள் இன்று அதற்காக கவலைப்படுகின்றனர்.
அவர் அரசியலில் தனது எதிர்காலம் குறித்து தீர்மானிப்பார். பிரதமர் பதவி அல்லது உயர்ந்த பதவியில் அவருக்கு வாய்ப்புள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது ஆதரவு அவசியம்.
கேள்வி- பிரபாகரனின் மரணம் குறித்து மீண்டும் பல கதைகள் உலாவருகின்றனவே?
பதில்- யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவேளை பிரபாகரனின் உடல் எங்களிடம் இல்லை. ஆனால் களத்தில் இருந்தவர்களிற்கு அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரிந்திருந்தது.
அவ்வேளை அங்கு காணப்பட்ட சவீந்திரடிசில்வாவும், கமால் குணரட்ணவும் விழிப்புடன் இருந்ததுடன் குளப்பகுதிக்கு வந்துள்ளனர், அவர்களுடைய படையணியினர் அவர்களின் பணியை செய்தனர், அது குறித்து விவாதிப்பதில் அர்த்தம் இல்லை.
கேள்வி- பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறித்து செய்தியை உங்களிற்கு தெரிவித்தது யார்?
பதில்- சரத்பொன்சேகா. நான் அந்த செய்தியால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். எனது பணியை நிறைவேற்றிய உணர்வு எனக்கு ஏற்பட்டது.
யுத்தத்தை முடித்துவிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. ஓரு மனிதனை கொன்ற மகிழ்ச்சியல்ல அது. பயங்கரவாதத்தை முடிவிற்கு கொண்டுவந்த மகிழ்ச்சியது.