பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மரணம் தொடர்பாக அவரது நண்பர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த மார்ச் 6ம் திகதி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் உடலில் மெத்தனால் கலந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
திருச்சூர் அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை நடந்தது. இதில் அவர் உடலில் பூச்சிகொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது.
கலாபவன் மணி இறப்பதற்கு முந்தைய நாள் சாலக்குடியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் மது விருந்து நடந்தது தெரிய வந்தது. இதில் சில மலையாள நடிகர்கள் மற்றும் அவரின் நண்பர்களும் கலந்து கொண்டனர்.
கலாபவன் மணியின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது தம்பி ராமகிருஷ்ணன் மற்றும் மனைவி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்கும் படி கேரள அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து மது விருந்தன்று அவருடன் இருந்த கலாபவன் மணியின் உதவியாளர்களான அனீஷ், முருகன் உள்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த பொலிசார் தீர்மானித்தனர்.
இதன் படி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தடயவியல் பரிசோதனை கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது. வரும் 27ம் திகதிக்குள் இந்த சோதனைகளை முடிக்க பொலிசார் தீர்மானித்துள்ளனர்.