ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரின் ஊதியத்தை 3 மடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஜனாதிபதிக்கு தற்போது மாதம் ஒன்றரை லட்சம் ரூபாயும், துணை ஜனாதிபதிக்கு ஒன்றே கால் லட்சம் ரூபாயும் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
7வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களின் ஊதியத்தை உயர்த்த மத்திய உள்விவகாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான பட்டியலுக்கு மத்திய அமைச்சரவையும், பாராளுமன்றமும் ஒப்புதல் வழங்கினால், ஜனாதிபதியின் ஊதியம் 1.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை உயரும். துணை ஜனாதிபதியின் ஊதியம் ஒன்றே கால் லட்சத்திலிருந்து மூன்றரை லட்சம் ரூபாயாக அதிகரிக்கும்.
இதே போல் மாநில ஆளுநர்களின் ஊதியமும் உயர்த்தப்படும். இறுதியாக கடந்த 2008ஆம் ஆண்டு ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள் ஆகியோரின் ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.