பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவிலுள்ள மேலும் 200 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
லசந்தவை தாமே கொலை செய்ததாக தெரிவித்த நிலையில் எதிரிசிங்க ஜயமான்ன என்பவர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவருடைய காலத்தில் அவருடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரிந்தவர்களில் 200 பேரிடம் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
எதிரிசிங்க ஜயமான்ன ஓய்வுபெறுவதற்கு முன்பு அவருடன் நெருங்கிப் பழகிய புலனாய்வு அதிகாரிகளும் இதில் உள்ளடங்குவர் எனவும் பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
தங்களது விசாரணைக்குத் தேவைப்படுபவர்களின் பெயர்ப்பட்டியலை புலனாய்வுப் பொலிஸார் ஏற்கனவே இராணுவத் தலைமைத்துவத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.