பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததாலே பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலில் உண்மை எதுவும் இல்லை என்று பிரபல நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கௌதமி வெள்ளிக்கிழமை காலையில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் கௌதமி வெளியிட்டார்.
அதில், “பிரதமரைசந்தித்தது சிலிர்ப்பாக இருந்தது. நட்சத்திரங்களைத் தொடும் உயரத்துக்கு இந்தியா செல்லும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து பிரதமரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “லைஃப் அகெய்ன்’ எனும் புற்று நோய் மறுவாழ்வு அமைப்பை தொடங்க உள்ளேன். இது குறித்து பேசவும் வாழ்த்து பெறவும் பிரதமரை சந்தித்தேன். அரசியல் ரீதியில் எதுவும் பேசவில்லை’ என்றார்.
இந்நிலையில் பாஜகவில் சேருவது தொடர்பாக பிரதமருடன் கௌதமி பேசியதாக சில சமூக ஊடக இணையதளங்களில் செய்திகள் வெளியாயின. இது குறித்து பேசிய அவர், பிரதமரை சந்தித்து நான் தொடங்கவுள்ள அமைப்பு குறித்து மட்டும்தான் பேசினேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பாஜகவில் உறுப்பினராக இருந்தேன். அதன் பிறகு நான் என்னை அக்கட்சியில் இருந்து விடுவித்துக் கொண்டேன். வேறு எந்த கட்சியிலும் நான் சேரவில்லை.
எனக்கு எந்த எல்லைகளும் இல்லை. எனது மகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். 24 மணி நேரமும் அதுதான் எனது கவனம். சமூக ஊடகங்களில் எனது சந்திப்பு பற்றி வதந்தி வெளிவருவது இயல்புதான். ஆனால் எனக்கு அதுபோன்ற எந்தத் திட்டமும் இல்லைஎன்றார் கௌதமி.