சுவிட்சர்லாந்து நாட்டில் இறைச்சி சாப்பிடுவதற்கு எதிராக போலியான மனித உடல் உறுப்புகளை தயாரித்து போராடவுள்ளதாக அந்நாட்டை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பு அறிவித்துள்ளது.
சுவிஸ் நாட்டை சேர்ந்த TIF என்ற விலங்குகள் நல அமைப்பு பொதுமக்கள் இறைச்சி சாப்பிடுவதற்கு எதிராக போராடி வருகிறது. மேலும், ஆடு, பசு போன்ற விலங்குகளிடமிருந்து பால் கறப்பதையும் இந்த அமைப்பு எதிர்த்து வருகிறது.
இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் 1-ம் திகதி சர்வதேச சைவ உணவு தினம் என்பதால், அதனை அனுசரிக்கும் விதத்தில் நாளை போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
சுவிஸில் உள்ள Thun மற்றும் Olten ஆகிய இரு நகரங்களின் வீதிகளில் இவ்வமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் முக்கிய அங்கமாக ‘போலியாக தயாரிக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல் உறுப்புகளை’ பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்த உள்ளனர்.
இப்போராட்டம் குறித்து TIF விலங்குகள் நல அமைப்பின் தலைவரான Tobias Sennhauser என்பவர் பேசியபோது, ‘போராட்டத்தின்போது மனித உடல் உறுப்புகள் போல் காட்சி தரும் இப்பொருட்களை மக்களிடம் காட்ட போகிறோம்.
விலங்குகள் உடல் உறுப்புகளை சாப்பிடும் மக்கள் இந்த மனித உடல் உறுப்புகளையும் சாப்பிடுவீர்களா? எனக் கேள்வி எழுப்ப போகிறோம்.
விலங்குகள் உடல் உறுப்புகளுக்கும் மனித உடல் உறுப்புகளுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. இரண்டும் மாமிசம் மற்றும் எழும்புகள் உள்ளவை தானே?
மாமிசம் உண்ணும் பொதுமக்கள் இனிவரும் காலங்களில் விலங்குகளை கொன்று இறைச்சி சாப்பிடக்கூடாது என்பதை வலியுறுத்தவே இப்போராட்டத்தை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.