அரியலூர் அருகே புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்து பெண் போலீஸ் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவரது மனைவி லதா. இவர்களுக்கு ரோகிணி, நிலானி என்ற 2 மகள்களும், வாஞ்சிநாதன் என்ற மகனும் உள்ளனர்.
செல்வகுமார் சிங்கப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 வருடமாக வேலை பார்த்து வரும் அவர், அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார்.
மேலும் மாதந்தோறும் தனது மனைவியின் செலவுக்கு பணம் அனுப்பி வந்தார். லதாவும், அவரது குழந்தைகளும் சிங்கப்பூரில் உள்ள செல்வகுமாருடன் போனில் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வகுமாரும், லதாவும் போனில் பேசும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியுடன் பேசுவதை நிறுத்திய அவர், மாதந்தோறும் செலவுக்கு பணமும் அனுப்பவில்லை.
இதனால் குடும்பத்தை நடத்துவதில் சிரமப்பட்ட லதா, தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பேசியும், செல்வகுமார் பணம் அனுப்பவில்லை.
இதைத்தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு போலீஸ்காரராக பணியாற்றி வரும் ராதிகா (33) என்பவரிடம், தனது கணவர் செலவுக்கு பணம் அனுப்பவில்லை.
எனவே அவரிடம் நீங்கள் பேசி பணம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி, செல்வகுமாரின் செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.
அதனை வாங்கிய ராதிகா, செல்வகுமாரை தொடர்பு கொண்டு பேசி, பணம் அனுப்ப கூறுகிறேன். நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறவே, அதனை நம்பி லதா அங்கிருந்து சென்றார். ஆனால் புகார் செய்து 4 மாதங்கள் ஆகியும் ராதிகா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனிடையே செல்வகுமாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய ராதிகா, லதாவுக்கு பணம் அனுப்புமாறு கூறியதோடு, செல்வகுமாரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் தங்களது புகைப்படங்களை ‘வாட்ஸ்அப்’ மூலம் பகிர்ந்து கொண்டனர். மேலும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.
இது தொடர்பான தகவலை செல்வகுமார் வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களுக்கு தெரிவித்தார்.
இதையறிந்த அவரது நண்பர் ஒருவர், இதுபற்றி லதாவிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த லதா, பெண் போலீஸ் ராதிகாவை சந்தித்து தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் அவர், எங்களுக்குள் அப்படி ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்த செல்வகுமார், மனைவி லதா மற்றும் குடும்பத்தினரிடம் சரியாக பேசவில்லை.
மேலும் காலையில் வீட்டில் இருந்து சென்றவர் இரவு தான் வீடு திரும்பியுள்ளார்.
இதனிடையே லதாவுக்கு தெரியாமல் கடந்த 28-ந் தேதி செல்வகுமாரும், ராதிகாவும் சுவாமிமலை கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனை அறிந்த லதா, இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெண் போலீஸ் ராதிகாவை தேடி வருகின்றனர்.
ராதிகாவுக்கு ஏற்கனவே ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி கிராமத்தை சேர்ந்த மணிமுருகன் என்பவருடன் திருமணமாகியுள்ளது.
அவர்களுக்கு ஹரிகரன் (5) என்ற மகன் உள்ளான். மணிமுருகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ராதிகா, கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.