உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் படைவீரர்களின் கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் இது வரையில் நிறைவேற்றவில்லை.
அது முறையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கொழும்பில் இன்று யுத்தத்தில் அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
காலை 8 மணிக்கு ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டம் தற்போது வரையில் தொடர்ந்து கொண்டு வருகின்றது. இதன் காரணமாக கொழும்பில் புறக்கோட்டை பகுதி வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
பயங்கரமான பிரபாகரனை கொன்ற யுத்த வீரர்கள் தற்போது வீதியில் நிற்கின்றார்கள். 30 வருடங்கள் கொடிய யுத்தத்தில் பங்கு பற்றிய இராணுவத்தினர் கை கால்கள் இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு முறையான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இது வரையிலும் எமக்கு சாதகமான எந்தவிதமான பதிலும் அரசியல் தலைமைகளினால் கொடுக்கப்படவில்லை. ஜனாதிபதிக்கும் இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவித்துள்ளோம்.
எமக்கு இழைக்கப்படும் இந்த அநீதி தொடருமானால் நாளை கொழும்பு முழுவதும் வீதிகளை முடக்கி இன்னும் பலரை ஒன்றிணைத்து கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம்.
அதற்காக நாளை கடையடைப்பு போராட்டம் ஒன்றினையும் ஏற்பாடு செய்வோம். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.