வடக்கில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுக்கு எட்டியவகையில் ஒரு சில மேஜர் தர அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இந்த ஆவா குழுவானது தற்போது வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் ஊக்குவிப்புடன் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்றது. ஆனால் அரசாங்கம் இந்த ஆவா குழுவை முழுமையாக அடக்கியே தீரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால் சட்டம் அதனை செய்யும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தவகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“வடக்கில் நடந்தால் மட்டும் பூதாகரமாக்கப்படுகின்றது”
நாட்டில் நடைபெறும் சாதாரண நிகழ்வுகள் வடக்கில் நடந்தால் மட்டும் பூதாகரமாக்கப்படுகின்றது.
அதுபோலவே சாதாரண வாள்வெட்டு சம்பவங்களையும் பொலிஸ் தாக்குதல்களையும் அரசியலாக்கி இலாபம் தேட முனைவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
மேலும் யாழில் இறந்த இரு பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோரே குறித்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கூறியுள்ள நிலையில் உலகிலேயே முதன்முதல் நடந்த சம்பவமாக இவ்விடயத்தை சித்தரிக்க முனைவது தவறான விடம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேல்மாகாண முதலமைச்சரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இன்ற இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.