வடக்கில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஒரு சில மேஜர் தர அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்
இந்த ஆவா குழுவானது தற்போது வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் ஊக்குவிப்புடன் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்றது. ஆனால் அரசாங்கம் இந்த ஆவா குழுவை முழுமையாக அடக்கியே தீரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால் சட்டம் அதனை செய்யும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தவகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும் அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு
கேள்வி:- வடக்கில் செயற்படும் ஆவா குழுவை போஷிப்பது யார்?
பதில்:- வடக்கில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமையவே ஒரு சில மேஜர் தர அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டது.
இந்த ஆவா குழுவானது தற்போது வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் ஊக்குவிப்புடன் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்றது.
ஆனால் அரசாங்கம் இந்த ஆவா குழுவை முழுமையாக அடக்கியே தீரும். அப்போது ஆவா குழுவை உருவாக்கியது யார் என்று எங்களுக்குத் தெரியும்.
அந்த குழுவிற்கு ஆயுதம் வழங்கியது யார்? இடம் வழங்கியது யார்? மோடடார் சைக்கிள் வழங்கியது யார் ? வசதிகள் செய்து கொடுத்தது யார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.
கேள்வி:- அந்தக் குழுவை அடக்க முடியாதா?
பதில்:- எம்மால் அடக்க முடியும். கொஞ்சம் காலம் தாருங்கள். அனைத்துப் பக்கங்களிலும் அரசியல் இருக்கின்றமை உங்களுக்குத் தெரியும். எனவே இவ்வாறான செயற்பாடுகளை ஓர் இரவில் முடக்க முடியாது. எனினும் நாம் அந்தக் குழுவை அடக்கியே தீருவோம்.
கேள்வி:- யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் செலுத்திய மோட்டார் சைக்கிள் ஆயிரம் வலுகொண்டது என்று கூறப்படுகின்றதே?
பதில்:- இந்த செய்தியை ஒரு பிரதான பத்திரிகையில் எழுதியவரைப் பற்றி எங்களுக்குத் தெரியும். அவருக்கு எப்போதுமே ஒரு பூச்சியம் அதிகமாகவே தெரியும். 1980களிலிருந்து இந்த நாட்டில் தீயை ஏற்படுத்துவதற்கு அந்த ஊடகவியலாளர் முயற்சித்திருக்கிறார்.
கேள்வி:- ஆவா குழு கோத்தபாயவின் தலைமையில் உருவாகியது என்று எப்படி கூறுகிறீர்கள்?
பதில்:– எங்களுக்குத் தெரியும்.
கேள்வி:- யுத்தத்தின் போது புலிகளை அடக்குவதற்கு இவ்வாறு ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கலாம் அல்லவா?
பதில்:- யுத்தத்தின் போது தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது எதற்கு. அதனால் தான் அப்போது இந்த ஆவா குழுவை உருவாக்கியவர்களே தற்போதும் அதனை இயக்குகிறார்களா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
அக்காலத்தில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யவும் வேறு பல செயல்களுக்கும் இந்த ஆவா குழுவினரே பயன்படுத்தப்பட்டு வந்தனர்.
கேள்வி:- நீங்கள் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. உங்களாலும் இன்னும் அதனை அடக்க முடியவில்லையே?
பதில்:- சற்றுப் பொறுத்திருங்கள் அடக்கிக் காட்டுகின்றோம்.
கேள்வி:- ஆவா குழுவானது தமிழ் திரைப்படங்களை பார்த்த ஒரு குழுவினர் உருவாக்கியதாக கூறப்படுகின்றதே?
பதில்:- கடந்த அரசாங்க காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் அறிவுக்கு எட்ட இந்த குழு உருவாக்கப்பட்டதாக நான் கூறுகிறேன்.
கேள்வி:- இந்தக் குழுவை எப்போதுதான் அடக்குவீர்கள்?
பதில்:- இப்போது சில கைதுகள் இடம்பெற்றுள்ளன. விரைவில் நடவடிக்கை எடுப்போம்
கேள்வி:- ஆவா குழுவை கைது செய்யும் போது அந்தக் குழுவை உருவாக்கியதாக நீங்கள் கூறுகின்ற முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கைது செய்யவேண்டுமே?
பதில்:– விசாரணைகளின் போது அந்த தேவை ஏற்படின் அதனையும் சட்டத்தின்படி செய்வோம்.
கேள்வி:- இதில் புலிகளா உள்ளனர்?
பதில்:- இல்லை.
கேள்வி:- சிங்களவர்களா இந்தக் குழுவில் உள்ளனர்?
பதில்:- தமிழர்களே உள்ளனர்
கேள்வி:- ஏன் இவர்கள் தற்போது செயற்படவேண்டும்?
பதில்:- வடக்கு மக்களை குழப்புவதற்காக செயற்படலாம். இங்கு வடக்கு மக்களுக்கு தமது தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்ற கவலை இருக்கின்றது. அடுத்ததாக இவ்வாறான குழுக்கள் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. நான் இவற்றுக்கு எதிரானவன்.