இலங்கையில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது.
இந்த ஆயுதப் போராட்டத்தின் அழிவுகள் ஏராளம். மனித உயிர் முதல் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என அதிகளவானவை அழிக்கப்பட்டன. இழக்கப்பட்டன.
போராட்டம் தீவிரம் பெற்றிருந்த காலங்களில் அரச படையினரால் வடக்கில் பல பாகங்களிலும் பொது மக்களின் காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
இவ்வாறு உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டு, படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் அண்மைய காலமாக இலங்கை அரசாங்கத்தினால் விடுவிக்கப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். வலி – வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 454 ஏக்கர் நிலத்தை மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக கையளித்தார்.
இந்நிலையில், குறித்த பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகளை இன்றைய தினம் பொது மக்கள் பார்வையிட படையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
28 ஆண்டுகளுக்கு பின்னர் பின்னர் தமது சொந்த நிலங்களை பார்வையிடச் சென்ற மக்கள், திரும்பிய திசையெல்லாம் யுத்த வடுக்களை காண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வகையில், விடுவிக்கப்பட்டுள்ள தையிட்டி வடக்கு பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் முற்று முழுதாகச் சிதைவடைந்த நிலையில் இடிந்து பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்டதாக அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிள்ளையார் ஆலயத்தைச் சுற்றி பற்றைகள் வளர்ந்த நிலையில், ஆலயத்திலுள்ள சிலைகள் அனைத்தும் சிதைவுற்று, அடையாளமற்றுக் காணப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதேவேளை, குறித்தப்பகுதியில் தையிட்டி கணேச வித்தியாலயம் முற்றுமுழுதாகச் சிதைவடைந்த நிலையில், காணப்படுவதாகவும், பாடசாலை இடிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடசாலை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், கூரைகள் எதுவும் இன்றி வெறும் கட்டடங்களை கொண்டதாக காணப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.