விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான கருணா மற்றும் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் போன்றோர் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
இந்நிலையில். சிறு குற்றம் புரிந்த அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ள போதிலும், இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை.
அரசியல் கைதிகள் தொடர்பில் நவம்பர் மாதம் 07ம் திகதிக்குள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளனர்.
கூட்டமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பாரிய சம்பவங்களுடன் தொடர்புபட்ட கருணா மற்றும் பத்மநாதன் போன்ற பலர் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றனர்.
இந்நிலையில், சிறு குற்றம் புரிந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளோம். குறிப்பாக நீண்ட காலம் தடுப்பில் இருத்ததன் அடிப்படையில் இவர்களை மன்னிப்பின் அடிப்படையில் விடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
தற்போது கைதிகளாக சிறயைிலுள்ளவர்களில் பலரை மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்ற பரிந்துரையை நாமும் ஜனாதிபதிக்கு முன்வைத்துள்ளோம்.
கூட்டமைப்பின் சார்பில் கடந்த காலங்களில் இது தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அவகாசம் கோரப்பட்டிருந்தது. அது நிறைவுறும் நிலையில் இதனை அவர்கள் கோரியிருக்கலாம்.
எனவே, இது குறித்து ஆராய்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை இடம்பெற வேண்டும் என நாமும் கருதுகின்றோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.