ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பிரக்ஸிட் பொது வாக்கெடுப்பை பாராளுமன்றம் கண்டிப்பாக ஏற்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் தெரசா மே வலியுறுத்தி உள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறலாமா, நீடிக்கலாமா என்று பொது மக்களிடம் வக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 50 சதவீதத்திற்கும் மேலானோர் வெளியேறலாம் என்று கூறியதால் அதற்கான நடவடிக்கைகளை பிரித்தானிய அரசு மேற்கொண்டு வந்தது.
இருப்பினும் பிரித்தானிய அரசியல்வாதிகள் சிலர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இப்பிரச்சனை அந்நாட்டு உயர் நீதிமன்றம் வரை சென்றது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்பது குறித்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
அதுமட்டுமில்லாமல் வெளியேறுவதற்கான முறைப்படியான பேச்சுவார்த்தையை ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடங்குவதற்கு அந்நாட்டு சட்டப்பிரிவு 50ன் படி பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியிருந்தது.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் தெரசா மே ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பை பாராளுமன்றம் கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும், மக்கள் தங்களது விருப்பத்தை வாக்கெடுப்பு மூலம் தெரிவித்து உள்ளனர் என்றும் அதனை நடைமுறைப்படுத்துவது அரசின் கடைமை எனவும் இதை தடுக்க முயற்சி செய்தால் அத்தனை முயற்சிகளையும் தான் எதிர்ப்பேன் என்றும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.