சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கு இஸ்லாத்தை பற்றி எதுவும் தெரியாது;
இஸ்லாத்தை பின்பற்றியதும் இல்லை என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சிக்கும் போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்பு, பொதுசிவில் சட்டத்தை ஆதரித்து பேசினார்.
இஸ்லாமியர்களின் முத்தலாக் முறைக்கு எதிரான கருத்துகளை முன்வைத்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இஸ்லாமிய தலைவர்கள் பலரும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர். திருநாவுக்கரசரும், குஷ்புவின் தனிப்பட்ட கருத்து அது என கூறியிருந்தார்.
சென்னை இமாம்
தற்போது சென்னை மக்கா பள்ளி தலைமை இமாம், திருநாவுக்கரசருடன் பேசும் தொலைபேசி உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாஜக பாணியா?
அந்த உரையாடலில், பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி ஒரு கருத்தை தெரிவிப்பதும் அது தனிப்பட்ட கருத்து என பாஜக தலைவர்களும் சொல்லி வருகின்றனர்; அதுபோல காங்கிரஸும் செய்கிறதோ என சந்தேகம் வருகிறது என இமாம் கூறுகிறார்..
குஷ்புவுக்கு எதுவும் தெரியாது
இது அனாவசிய சந்தேகம் என்று சொல்லும் திருநாவுக்கரசர், “அவர்(குஷ்பு) இந்து மேனை மேரி பண்ணியிருக்கிறார்; அவர் இஸ்லாத்தை பின்பற்றியதும் இல்லை; அவருக்கு இஸ்லாத்தை பற்றி எதுவுமே தெரியாது” என கூறுகிறார்.