அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சரால் முன்வைக்கப்பட்டிருக்கும் தூரநோக்குடன் கூடிய முன்மொழிவுகள் விடயத்தில் எதிரணியினர் எதிர்ப்பு அரசியல் என்ற நிலையில் வைத்து இதனைப் பார்க்காமல் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து யதார்த்த பூர்வமான விதத்தில் அணுக வேண்டும்.
இந்த பட்ஜட் முழுமையானது எனக் கூற முற்படவில்லை. ஆனால் எதுவும் இல்லை என்று கூறவும் முடியாது.
முக்கியமான சில விடயங்களில் மக்கள் பக்கம் சார்ந்த வரவு செலவுத் திட்டமாகக் காணப்படுவதை மறுத்துரைக்கவும் முடியாது. அதே சமயம் சாதாரண மக்களை பாதிக்கும் சில விடயங்களும் காணப்படுவதை மூடி மறைக்கவியலாது.
மக்களுக்கு குறுகியகால, நீண்டகால நன்மைகளை கொண்டுவரக்கூடிய விதத்தில் சகல துறைகளிலும் ஊக்கமளிக்கும் வகையில் வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
அதேசமயம் தவிர்க்க முடியாத வகையில் சில கசப்பு மருந்து மாத்திரைகளும் உள்ளடங்கப்பட்டுள்ளது. இன்று தொலைபேசி இல்லாதவர்களை காண்பதே அரிது.
எல்லோரிடமும் செல்போன்கள் உள்ளன இந்த நிலையில். சாதாரண மக்கள் மத்தியில் தொலைபேசி கட்டண மீளாய்வு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதேபோன்று நாட்டிலுள்ள வங்கிகளிலிருந்து ஏ. ரி. எம். இயந்திரங்கள் மூலம் பணம் மீளப் பெற்றுக்கொள்ளும் போது அதற்கான கட்டண அறவீட்டை அதிகரித்திருப்பது சாதாரண மக்களை பாதிப்பதாகவே காணமுடிகிறது.
அத்துடன் முச்சக்கர வண்டிகள் வீதி ஒழுங்கை மீறும் போது விதிக்கப்படும் அபராதத் தொகை 2500 ரூபாவிலிருந்து அதிகரித்திருப்பதன் காரணமாக அரசு அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டிருப்பதாகவே பார்க்க முடிகிறது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பித்து முடிந்த கையோடு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் போது பெரும்பாலானவர்கள் இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியதை அவதானிக்க முடிகிறது.
ஒருபக்கம் மக்கள் சார்ந்த தீர்வுகள் முன்வைத்து மறுபுறம் மக்களை அதிருப்தி கொள்ளச் செய்யும் அம்சங்களையும் காண முடிகிறது.அரசாங்கம் ஓராண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது பல கோணங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
உலகளாவிய மட்டத்தில் பொருளாதாரம் ஆட்டம் கண்டு நிலைகுலைந்துபோயுள்ள சூழ்நிலையில் சர்வ சம்பூரணமாக மக்களுக்கு முழு அளவில் தன்னிறைவு கொள்ளக் கூடிய பட்ஜட்டை சமர்ப்பிக்க முடியும் என எதிர்பார்க்க முடியாது.
என்றாலும் கூட மக்களைப் பாதிக்கக்கூடிய வகையில் அதுவும் வெளிப்படையாக பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் முன்மொழிவுகள் அமையும் போது அரசாங்கம் அதன் ஸ்திரத்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்படுகின்றது.
இது தவிர்க்க முடியாததாகும். நாட்டின் எதிர்காலம் குறித்து செயற்பட முனைகின்றபோது மக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதை அரசு முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வலது கரத்தால் ஒன்றைக் கொடுத்து இடது கையால் மற்றொன்றைப் பறித்தெடுக்க முனையும் போது அரசின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதை மறந்துவிடக்கூடாது.
பொருளாதாரப் பின்னடைவைக்காட்டி மக்களுக்கான எதிர்பார்ப்புகளை உதறித் தள்ளவும் முடியாது.
நவீன இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு யோசனைகளை நிதியமைச்சர் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளதை வரவேற்கின்றோம்.
ஆனால் மக்களை இருட்டுக்குள் வைத்து நவீன இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்க்க முடியாது.
நல்லாட்சி அரசு நாட்டைப் பொறுப்பேற்கின்ற போது நாடு ஒன்பது ட்ரிலியன் கடன் சுமைக்குள் தள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாட்டை எடுத்த எடுப்பில் துரித அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்ல முடியும் என எதிர்பார்க்கவியலாது.
மக்களை வாழவைத்துக் கொண்டே இப்பணியில் பயணிக்க வேண்டியுள்ளது.
அரசு பதவிக்கு வந்து இரண்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கின்றது. இந்தக் காலகட்டத்தில் கூட பொருளாதாரம் தளம்பல் நிலையிலேயே காணப்படுகின்றது.
இன்று முழு உலகும் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி மீள வழியின்றித் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
அவ்வாறான சூழ்நிலையில் நூறு வீதம் தன்னிறைவு கொண்ட பட்ஜட்டை எம்மால் எதிர்பார்க்க முடியாது.
இந்த வகையில் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நல்லாட்சி அரசின் இரண்டாவதும், 2017ம் ஆண்டுக்குமான இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பு அரசியல் கண்கொண்டு மட்டும் பார்க்காமல் யதார்த்தபூர்வமாக அவதானிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அதற்காக விமர்சிக்காமல் குறைகளை சுட்டிக்காட்டாமல் வாய்பொத்தி இருக்கச் சொல்லவில்லை.
ஆரோக்கியமான விமர்சனங்களை, விவாதங்களை தாராளமாக முன்வைக்கலாம்.
இதனை கட்சி அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல் நாட்டினதும், மக்களினதும் நலனிலும், எதிர்காலத்திலும் நல்லது நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயற்பட வேண்டும் என்பதை சொல்லிவைக்க விரும்புகின்றோம்.