மாவிலாறு சம்பவங்கள் நோர்வேயின் சமாதான முயற்சிகளை தோல்வி நிலைக்குத் தள்ளியபோதும் நோர்வே தரப்பினர் தொடர்ந்தும் அதில் ஈடுபட்டது தனக்கு வியப்பைத் தந்ததாக ரணில் கூறுகிறார்.
மாவிலாறு நிலமைகள் பிரபா – ராஜபக்ஸ உறவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
ஏற்கெனவே பின்கதவு முயற்சிகள் இருந்தபோதும் அவற்றிற்கு என்ன நடக்கப்போகிறது? என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
புலிகளும் கண்காணிப்புக்குழுவின் பிடியிலிருந்து விலகுவதையே விரும்பினார்கள். ஏனெனில் சர்வதேச சமூகத்துடன் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பது ரணிலின் அபிப்பிராயமாக இருந்தது.
ஆனால் கோதபய இன் அபிப்பிராயம் பின்வருமாறு இருந்தது.
2006ம் ஆண்டு யூலை, ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவங்கள் அவற்றை உணர்த்தியதாக அவர் கூறுகிறார்.
1200 படையினரை ஏற்றி வந்த கப்பலைக் கவிழ்ப்பதன் மூலம் பெருந்தொகையான படையினரைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
இவர்களின் சடலங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது சிங்கள மக்கள் மனதில் வெறுப்புகள் அதிகரிக்கும்.
அதனைத் தொடர்ந்து மூதூர் துறைமுகத்தைக் கைப்பற்றி திருகோணமலைத் துறைமுகத்தைத் தாக்குவதற்கான பலத்தை அதிகரிக்க திட்டமிட்டிருந்தார்கள்.
அதன் பின்னர் அத் துறைமுகத்திற்குச் செல்வதைத் தடுத்தால் யாழ். செல்லும் படையினரின் போக்குவரத்தைத் தடுக்க முடியும்.
அதன் பின்னர் குடாநாட்டைத் தாக்கி மீண்டும் கைப்பற்றலாம்.
இப் பாரிய திட்டம் நிறைவேறியிருந்தால் குடாநாட்டைத் துண்டாடி தனிநாட்டைப் பெற்றிருப்பார்கள்.
இத் திட்டத்தோடு பாரிய போரை ஆரம்பித்த அவர்களின் முயற்சி உரிய நேரத்தில் தடுக்கப்பட்டது என்கிறார் கோதபய.
சர்வதேச தொண்டு நிறுவனத்தில் மூதூரில் பணிபுரிந்த 17 தொண்டர்கள் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போருக்கான தீயை மூட்டியது.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி முகமாலை முன்னரங்கை புலிகள் தாக்கினர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் யாழிலிருந்து வன்னிக்கு செல்லும் கடக்கும் இடமாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
புலிகளின் அம் முயற்சியும் வெற்றிபெறவில்லை.
கடற் புலிகளின் ஊர்காவற்துறை கடற்டை முகாம் தாக்குதலும் தோல்வி அடைந்தது. இவற்றிற்கு மத்தியில் திருகோணமலை சீனன்குடா கடற்படை முகாம் மீது தீவிர தாக்குதலை நடத்தினார்க்ள.
இப் பின்னணியில் அமெரிக்காவில் கூடிய கூட்டுத் தலைமை நாடுகள் உடனடியாக வன்முறையை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறும் கோரியது.
இச் செய்தி எவர் செவிகளிலும் போய்ச் சேரவில்லை. அரச பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல அரசாங்கத்தையும், பயங்கரவாதிகளையும் ஒரே மாதிரிப் பார்ப்பது தவறு எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி பாகிஸ்தானிய தூதுவரின் காரிற்கு கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இச் சம்பவத்தில் 7 பேர் மரணமடைந்ததோடு, 10 பேர் படுகாயமடைந்தனர்.
அதே தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின்மேல் விமானத் தாக்குதல் நடந்தது.
அதில் 61 யுவதிகள் மரணமடைந்ததோடு, சுமார் 250 பேர் காயமடைந்தனர். இப் படுகொலை குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டது.
(முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோ லை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், பாட சாலை மாணவிகள் 61 பேர் கொல்லப்பட்டனர்.)
இத் தாக்குதலில் மரணித்தவர்கள் யாவரும் புலிகளால் பராமரிக்கப்படும் அனாதைகள் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களுக்கு சமூகத்தில் தலை நிமிர்ந்து செயற்படுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்ட வேளையில் அக் கொடிய தாக்குதல் நடத்தப்பட்டதாக புலிகள் குற்றம் சாட்டினர்.
ஆனால் கெகலிய ரம்புக்வெல இன் கருத்துப்படி தமது உளவுத்துறை பல மாதங்களாக கவனித்து வந்ததாகவும், அது ராணுவப் பயிற்சி முகாம் எனவும் மாறி மாறி இவ்வாறான விளக்கங்கள் வெளிவந்தனவே தவிர அம் மரணங்கள் அல்லது காயப்பட்டோர் குறித்து எந்தக் கவலையும் வெளிப்படவில்லை.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற புலிகள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து புலிகளை மேலும் பின் தள்ள ராணுவம் முடிவு செய்தது.
அதனால் முகமாலையிலிருந்த புலிகளின் முகாம் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முகமாலையிலிருந்து வன்னிக்கு கடந்து செல்லும் சந்தி மூடப்பட்டது.
இதனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே அல்லது உள்ளே வர முடியாதவாறு ஏ 9 பிரதான நெடும்சாலை மூடப்பட்டது.
இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தமே அப் பாதையைத் திறப்பதற்கான வாய்ப்பை வழங்கியது.
இப் பாதை மூடுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் விடுதலைப்புலிகளே. முகமாலைச் சந்தியைப் பயன்படுத்தி புலிகள் வரி வசூலித்து பெருமளவு பணம் திரட்டியிருந்தார்கள்.
ராணுவம் அப் பாதையை மூடியதால் யாழப்பாணத்தில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஏனெனில் உணவுப் பொருட்களின் போக்குவரத்து ஏ9 பாதைப் போக்குவரத்தில் பிரதானமாக தங்கியிருந்தது.
ராணுவம் மூதூரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து புலிகளின் சம்பூர் முகாமைக் கைப்பற்றத் திட்டமிட்டார்கள். ஏனெனில் யாழ்ப்பாணத்திற்கு ராணுவத்தை எடுத்துச் செல்வதற்கு திருகோணமலைத் துறைமுகத்தையே ராணுவம் பயன்படுத்தியது.
புலிகள் சம்பூரில் இருந்தால் அது திருகோணமலைத் துறைமுகத்திற்கு ஆபத்து என்பதால் சம்பூரிலிருந்து புலிகளை அகற்ற ராணுவம் திட்டமிட்டது.
அதனை மகிந்த மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
இது ராணுவத்தைப் பாதுகாப்பதற்கான உத்தி என அரச தரப்பில் கூறப்பட்ட போதும் சம்பூர் தாக்குதல் என்பது புலிகள் மீதான தாக்குதலாகவே அமைந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அவ்வாறான தாக்குதலை ஏற்றுக்கொள்ளாது என்பதால் அத் தாக்குதல் தமது பாதுகாப்பு கருதியே என அரச தரப்பு தொடர்ந்து தெரிவித்தது.
ஆனால் இன்னும் சில அதிகாரிகள் அத் தாக்குதலை மனிதாபிமான தேவை கருதியே எனத் தெரிவித்தனர்.
இவ்வாறு 2002ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறுவதும், அதன் பின்னர் தாம் எண்ணிவாறு வியாக்கியானம் வழங்குவதும் அந்த ஒப்பந்தம் தோல்வி அடைந்த ஒன்று என்பதை உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில் புலிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்புக் குழு உறுப்பினர்களை வெளியேறவேண்டுமென காலக்கெடு ஆகஸ்ட் 31ம் திகதி என விதித்த காரணத்தால் அக் காலம் நெருங்குவதற்கு முன்பதாகவே டென்மார்க், சுவீடன், பின்லாந்து நாடுகளைச் சேர்ந்த உறுப்பனர்கள் வெளியேறினர்.
கண்காணிப்புக் குழுவின் சுமார் 30 உறுப்பினர்கள் வெளியேறியதால் நோர்வே, ஐஸ்லாந்து நாடுகளைச் சேர்ந்த 20 உறுப்பினர்களே செயற்பட்டனர்.
பின்னர் 10பேர் இணைந்த போதும் கண்காணிப்புக்குழு பயனற்ற ஒன்றாகவே இருந்தது.
2006ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்ஸ அவர்கள் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் அவர்களைச் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகின.
இச் சந்திப்பிற்கு வட அயர்லாந்தில் மிக நீண்ட காலமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பின்னர் ரொனி பிளேயர் காலத்தில் ஏற்பட்ட பெரிய வெள்ளி ஒப்பந்தம் காரணமாக ஐ ஆர் ஏ என அழைக்கப்படும் ஐரிஸ் விடுதலை ராணுவம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டது.
இவ் விடுதலை ராணுவத்தின் மிக முக்கிய தலைவராக மார்டின் மக்னஸ் ( Martin Mcguinness) செயற்பட்டார்.
2004ம் 2005ம் ஆண்டு காலத்தில் வட அயர்லாந்திற்கு மகிந்த சென்றிருந்த வேளை மார்டின் மக்னஸ் உடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ரொனி பிளேயருக்கும், மகிந்தவிற்கும் இடையே தொடர்புகளை இவரே ஏற்படுத்தியிருந்தார்.
வட அயர்லர்ந்தில் சந்தித்த வேளை மார்ட்டின் அவர்களை இலங்கை வருமாறு மகிந்த அழைப்பு விடுத்திருந்தார்.
மகிந்த ஜனாதிபதியாக தெரிவாகியதும் 2006ம் ஆண்டு ஜனவரியில் அங்கு சென்றார்.
அங்கு அவர் மகிந்தவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள், அதனைத் தொடர்ந்து அவர் மேலும் ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகள் காரணமாக ராணுவ வெற்றி இரு சாராருக்கும் சாத்தியமில்லை.
பேச்சுவார்த்தை மூலமே சாத்தியமாகும், அதற்கு இரு சாராரினதும் அர்ப்பணிப்பு அவசியம் என்றார்.
மார்ட்டின் மக்னஸ் அவர்களுடன், அவரது சின்பைன் ( Sinn Fein ) கட்சியின் இன்னெரு முக்கியஸ்தரான எய்டன் மக்ரர் (Aidan McAteer ) உடன் சென்றிருந்தார்.
கொழும்பு தலைநகரில் காணப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அவருக்கு வட அயர்லாந்து நிலமைகளை ஞாபகமூட்டியது.
அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவர் உணர்ந்தார்.
அரசாங்க தரப்பில் பேச்சவார்த்தையில் ஈடுபடுவதற்கான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அவர் ஆவலாக இருந்தார்.
அவருக்கு ஆரம்பத்தில் சகல தரப்பாரையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சென்றதும் அவருக்கு புலிகளைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதன் பின்னர் 2006ம் ஆண்டு வசந்த காலத்தின் போது அன்றைய அமைச்சர் ஜனாதிபதி ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தனா புலிகளுடன் புதிய உறவை ஏற்படுத்தும் பொருட்டு மீண்டும் மார்ட்டின் மக்னஸ் (Martin Mcguinness) இற்கு அழைப்பு விடுத்தார்.
வன்னி செல்வதற்கு வாய்ப்புத் தருவதாக உறுதி செய்யப்பட்டது. நோர்வே இப் பிரச்சனையில் ஈடுபட்டிருப்பதால் அம் முயற்சிகளுக்கு எதுவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் தாம் கவனமாக இருப்பதாக தெரிவித்தார்.
இலங்கை வந்திருந்த மார்டின் மக்னஸ், எய்டன் மக்ரர் இருவரும் கிளிநொச்சியில் தமிழ்ச் செல்வன் உட்பட மற்றும் பலருடன் பல மணி நேரம் உரையாடினர்.
அவ் உரையாடலின் போது பிரித்தானிய ராணுவம் ஐரிஸ் விடுதலை ராணுவத்தினைத் தோற்கடிக்க முடியாது.அதே போலவே ஐரிஸ் விடுதலை ராணுவம் பிரித்தானிய ராணுவத்தைத் தோற்கடிக்க முடியாது என்ற நிலையில் பேச்சுவார்த்தைக்குச் செல்வதே ஒரே வழியாக அமைந்தது.
இத் தருணத்தில் புலிகள் அரசாங்கத்தின் மீதான தமது அவ நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இது அவருக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
இப் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளை அவர் அரச தரப்பினருக்கு கூறிய பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது இரு சாராருமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை எனத் தெரிவித்தார்.
ஆனால் அரசாங்கம் போருக்கான தயாரிப்புகளை மேற்கொள்வதை இருவரும் நன்கு உணர்ந்துகொண்டனர்.
சஜின் வாஸ் குணவர்த்தனா
இதன் பின்னர் சஜின் வாஸ் குணவர்த்தனா மார்ட்டின் அவர்களைத் தொடர்புகொண்டு பிரதமர் ரொனி பிளேயருடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறு வேண்டிக்கொண்டதைத் தொடர்ந்தே அவ் உறவுகள் ஆரம்பமாகின.
இதன் நோக்கம் தெளிவாக இல்லையாயினும், பிரித்தானிய அரசிடமிருந்து விசேட பிரதிநிதியை பேச்சுவார்த்தைகளை நடத்த அரசு எதிர்பார்த்திருந்தது. குறிப்பாக ரொனி பிளேயரையே ஈடுபட வைக்க அவர்கள் நோக்கினர்.
வாசகர்களே!
இலங்கை அரசு பேச்சுவார்த்தை முயற்சிககளில் விடுதலைப் புலிகள் நடந்துகொள்ளும் முறையை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர்கள் பேச்சுவார்த்தைகளில் விசுவாசமாக இல்லை என்பதை உணர்த்தி தமது போருக்கான நியாயங்களைத் தயாரிப்பதிலேயே குறியாக இருந்தனர்.
இப் பேச்சுவார்த்தைகள் குறித்து தற்போது வட அயர்லாந்தின் உதவி முதலமைச்சராக உள்ள மார்ட்டின் மக்னஸ் அவர்களின் அபிப்பிராயங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.
தொடரும்…
Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். தொகுப்பு : வி. சிவலிங்கம்
ஈழப் போர் 4 ஆரம்பம்!! : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 30) -சிவலிங்கம்