இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 22 மாதங்கள் கடந்துள்ளதாகவும், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இந்த காலப் பகுதி தொடர்பில் தான் திருப்தியடைவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உணவு, உடை, நீர் போன்றவற்றை எதிர்பார்த்து இலங்கை மக்கள் தன்னை தெரிவு செய்யவில்லை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை எதிர்பார்த்தை மக்கள் தன்னை தெரிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டமையானது, தனது முதலாவது வெற்றி என அவர் ஹிந்து நாளிதழுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக இலங்கை ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரம் உடனடியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் முழுமையான நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் அரசத் தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் அல்லது வடப் பகுதிக்கு மிக அரிதாகவே விஜயம் செய்திருந்ததாகவும், ஆனால் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 22 மாதங்களில் 11 தடவைகள் யாழ்ப்பாணம் அல்லது வடப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாகவும் ஜனாதிபதி நினைவூட்டியுள்ளார்.
தமிழ் பிரதிநிதிகளின் ஊடாக வடப் பகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் யோசனைகளை தான் பெற்றுக் கொள்ளவில்லை எனவும், தான் நேரடியாகவே அவர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வடப் பகுதியிலுள்ள 90 சதவீதமான மக்கள் தனக்கு வாக்களித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என தன்மீது வடப் பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனினும், தன்னால் மாத்திரம் அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது எனவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் முழு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்;.
வடப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது சொந்த நிலங்களிலிருந்த இராணுவம் வெளியேற்றப்பட்டு அவர்களின் காணிகள் மீள வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமது அரசாங்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.