டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் பாரீஸ் ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக தற்போது உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி முடிவடைகிறது. அதன் பின்னர் அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள அவர் புவி வெப்பமயமாதலை தடுக்க, ஐ.நாவால் கொண்டுவரப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தை வெகு விரைவாக கைவிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஐ.நா தலைமையில் பருவ நிலை மாற்றத்தை தடுக்க 190 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒப்புதலோடு கொண்டுவரப்பட்ட ஒப்பந்தம் தான் பாரீஸ் ஒப்பந்தம். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் உலகில் அதிகரிக்கும் வெப்பத்தை இனியும் அதிகரிக்க விடக் கூடாது என்பதே ஆகும்.
இதில் அமெரிக்கா மற்றும் உலகின் பெரும்பான்மையான நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வாக கடந்த 5 ஆம் திகதி நடைமுறைக்கு கொண்டுவந்தன.
ஆனால் தனது தேர்தல் பிரச்சாரங்களின் போதே, புவி வெப்பமயமாதலை நிராகரித்து பேசிய டொனால்ட் டிரம்ப், ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் பாரீஸ் ஒப்பந்தத்தை கைவிடக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், பராக் ஒபாமாவின் பதவி காலம் வரும் ஜனவரி 20 வரை உள்ளது.
அது வரை இந்த ஒப்பந்தத்தை வலுபெறச் செய்ய என்னால் முடிந்த காரியங்களைச் தான் செய்வேன் என்றும் ஏனென்றால் உலகில் இருக்கும் பெரும்பாலான விஞ்ஞானிகள் பருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர் எனவும் இது காலத்தின் கட்டாயம் எனவும் கூறியுள்ளார்.