வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முடிவானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானம் என, கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.
வடமாகாண சபையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இரு உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதால் இரு உறுப்பினர்களுக்கும் அரைவாசி காலத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க கட்சி ஏற்கனவே தீர்மானித்ததாக கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.
அதன் பிரகாரம் அந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களான கந்தசாமி கமலேந்திரன் மற்றும் வைத்தியநாதன் தவநாதன் ஆகியோருக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
எனினும் கமலேந்திரன் கட்சியில் இருந்து விலக்கப்பட்டதை அடுத்து வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக சின்னதுரை தவராஜா நியமிக்கப்பட்டார்.
கட்சியின் தீர்மானத்திற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்
வைத்தியநாதன் தவநாதனுக்கு வடமாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்குமாறு கோரி கட்சியின் செயலாளர் என்றவகையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவிற்கு கடிதம் எழுதியதாக டக்ளஸ் தேவானந்த குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அந்த கடிதத்தினை ஏற்றுக்கொண்டு, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுமாறு கூறி,ஆளுநர், முதலமைச்சர், அவைத்தலைவர், தேர்தல் அதிகாரி உட்பட அறுவருக்கும், கட்சியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் தனக்கும் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
எனினும் கட்சிக்குள் எதுவித உட்பூசல்களும் இல்லை எனவும் கட்சியினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எதிர்க்கட்சி தலைவர் பதவி மாற்றப்படவுள்ளதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.